பாக். அணுசக்தி மையத்தில் வாயு கசிவு-2 பேர் பலி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் உள்ள அணுசக்தி மையத்தில் திடீரென்று ஏற்பட்ட விஷ வாயுக் கசிவில் சிக்கி 2 ஊழியர்கள் பரிதாபமாக இறந்தனர்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தின் தென்மேற்கே 150 மைல் தொலைவில் உள்ள குஷாப் நகரில் அணுசக்தி தயாரிக்கப் பயன்படும் கனநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது.
இந்த சுத்திகரிப்பு நிலையத்தி்ல வருடாந்திர பராமரிப்பு பணிகள் நடந்து வந்தன. அப்போது திடீரென்று அங்கு விஷவாயுக் கசிவு ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்த ஊழியர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில் விஷவாயுவை எரித்து அழிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்களில் 2 பேர் விஷவாயு தாக்கி பரிதாபமாக இறந்தனர்.
சம்பவம் குறித்து பாகிஸ்தான் அணுசக்தி கமிஷன் கூறியதாவது:
குஷாப் கனநீர் நிலையத்தில் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. இந்த விபத்தினால் பொதுமக்களுக்கு எந்த அபாயமும் இல்லை.
விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கப்படுகிறது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கனநீர் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் ஹைட்ரஜன் பாஸ்பேட் சிலிண்டர் வெடித்ததால் இந்த விபத்து ஏற்பட்தாக உள்ளூர் தொலைக்காட்சியில் செய்தி வெளியானது.












Click it and Unblock the Notifications