அரவாணிகளுக்கு நல வாரியம் அமைப்பு - கருணாநிதி அறிவிப்பு
சென்னை: அரவாணிகளுக்கென தனி நல வாரியத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. சமூக நலத்துறை அமைச்சர் இதன் தலைவராக இருப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த ஜனவரி 23ம் தேதி தமிழக சட்டசபையில் இடம் பெற்ற ஆளுநர் உரையில் அரவாணிகளுக்கு நல வாரியம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி தற்போது தமிழ்நாடு அரவாணிகள் நல வாரியம் எனும் புதிய அமைப்பு தொடங்கப்படுகிறது. மாநில சமூக நலத்துறை அமைச்சர் இதன் தலைவராக இருப்பார்.
சமூக நல வாரியம் மற்றும் சத்துணவு திட்ட சிறப்பு ஆணையர் இதன் துணைத் தலைவராக இருப்பார். அலுவல் சார்ந்த உறுப்பினர்களாக நிதித்துறைச் செயலாளர், சட்டத் துறை செயலாளர், தமிழ்நாடு மகளிர் ஆணையத் தலைவி, தமிழ்நாடு மனித உரிமை மற்றும் சமூக நீதி ஆணையத்தின் காவல்துறைத் தலைவர், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர், கல்லூரிக் கல்வி இயக்குநர், மருத்துவக் கல்வி இயக்குநர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர், சமூக நலத்துறை இயக்குநர் ஆகியோர் இருப்பார்கள்.
அலுவல் சாராத உறுப்பினர்களாக சென்னை நூரி, காஞ்சிபுரம் பிரியாபாபு, சென்னை ஹரிஹரன், சென்னை செல்வி ஆர்.ஜீவா, விழுப்புரம் சலீமா, வேலூர் கங்கா, திருச்சி மோகனா, மதுரை காதர் மொகைதீன் என்கிற கனிமொழி ஆகியோரை முதல்வர் கருணாநிதி நியமித்து ஆணையிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications