ராஜினாமா வாபஸ்-ஜாபர் ஷெரீபுக்கு ஆளுநர் பதவி?
டெல்லி: கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பேரனுக்கு சீட் கொடுக்காததால் காங்கிரசை விட்டு விலகுவதாக அறிவித்த அக் கட்சியின் மூத்த தலைவர் ஜாபர் ஷெரீப், தனது ராஜினாமாவை வாபஸ் பெற்றுள்ளார்.
அவருக்கு மகாராஷ்டிரா மாநில கவர்னர் பதவியை கொடுக்க அக்கட்சியின் தலைமை பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.
முன்னாள் மத்திய ரயில்வே அமைச்சரும் கர்நாடக மாநில காங்கிரஸ் தேர்தல் அறிக்கைக் குழு தலைவருமான ஜாபர் ஷெரீப் சட்டசபை தேர்தலில் போட்டியிட தனது பேரனுக்கும், ஆதரவாளர்களுக்கும் சீட் கேட்டிருந்தார். ஆனால் அவர் கூறிய யாருக்கும் சீட் கிடைக்கவில்லை.
இதையடுத்து கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்தார். டெல்லியிலிருந்து வந்த மூத்த காங்கிரஸ் அவரை சந்தித்து சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால் தனது ராஜினாமா கடிதத்தை தலைமைக்கு அனுப்பி வைத்தார்.
சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் அவரை தங்கள் பக்கம் இழுக்க போட்டியில் இறங்கியுள்ளன.
இந் நிலையில் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, ஷெரீப்பை நேற்று டெல்லிக்கு அழைத்துப் பேசினார்.
இதைத் தொடர்ந்து தனது முடிவை மாற்றிக் கொண்ட ஷெரீப் ராஜினாமாவை திரும்பப் பெற்றார். அவர் கூறுகையில், கட்சியின் நலம் கருதி இந்த முடிவை எடுத்துள்ளேன். கட்சி ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று சோனியா கேட்டுக் கொண்டார்.
அதை ஏற்றுக் கொண்டு ராஜினாமா முடிவை மாற்றிக் கொண்டேன். கட்சி பணிகளில் இனி தொடர்ந்து பணியாற்றுவேன். இன்னும் ஓராண்டில் பாராளுமன்ற தேர்தல் வர உள்ள நிலையில், மதவாதத்தை வீழ்த்துவதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதில் கர்நாடக மாநிலம் முதன்மையாக இருக்கும் என்றார்.
இதற்கிடையில் ஷெரீப்பை சமாதானப்படுத்த மகாராஷ்டிர மாநில கவர்னர் பதவியை அவருக்கு வழங்க காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. கர்நாடக தேர்தலை முன்னிட்டு எஸ்.எம்.கிருஷ்ணா அந்த மாநில கவர்னர் பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications