தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க கடும் நடவடிக்கை- கருணாநிதி உறுதி

சட்டசபையில் இன்று காவல்துறை மானியக்கோரிக்கை கொள்கை விளக்கக் குறிப்புகளை முதல்வர் கருணாநிதி தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:
தமிழக காவல்துறை ஒரு சிறந்த காவல்துறை என்ற தனிப்பெருமையை பெற்றுள்ளது. காவல்துறையின் நடவடிக்கையால் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு மற்றும் மத நல்லிணக்கம் நன்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. தொழிலாளர்கள், விவசாயிகள் பிரச்னை ஏதுமின்றி பொது அமைதி காக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தீவிரவாத செயல்கள் தலைதூக்கியுள்ள போதிலும் தமிழகத்தி்ல் காவல்துறை மேற்கொண்டுள்ள தீவிர நடவடிக்கை காரணமாக வன்முறை செயல்கள் தடுக்கப்பட்டுள்ளன.
அண்டை மாநிலங்களில் இருந்து தீவிரவாத அமைப்புகள் தமிழகத்தில் காலூன்ற முயன்றபோது உடனுக்குடன் அவை தடுத்து நிறுத்தப்பட்டன. 2007ம் ஆண்டில் மாவோயிச குழுவை சேர்ந்த 17 பேர் கைது செய்யப்பட்டனர். 4 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் இருந்து வரும் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இலங்கைக்கு பொருட்களைக் கடத்திய 97 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 36 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் அடைக்கப்பட்டுள்ளனர். 2008 மார்ச் 31ம் தேதிவரை 14 இலங்கைத் தமிழர்கள் உள்பட 38 பேர் கைது செய்யப்பட்டு, 30 தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறை வைக்கப்பட்டனர்.
அரசு எடுத்துவரும் கடும் நடவடிக்கை காரணமாக 48 இலங்கை தீவிரவாதிகள் உள்பட 139 கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். கடத்தல் நடவடிக்கைகளும் தீவிரவாத ஊடுருவலும் முற்றிலுமாகத் தடுக்கப்பட்டுள்ளன.
காவல்துறையை நவீனமயமாக்க கடந்த நிதியாண்டில் ரூ.101 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிதியாண்டில் ரூ.68 கோடிக்கு திட்டம் மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
காவல்துறையின் அனைத்து செயல்பாடுகளும் திருப்திகரமாக உள்ளது. என்றாலும் பாதுகாப்புக்கும், அமைதியான சூழலுக்கும் அச்சுறுத்தலாக விளங்கக்கூடிய சவால்களை சமாளிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
காவல்துறையினர் மக்களிடம் நட்போடு பழகும் முறையே அடிப்படை கொள்கையாக உருவாக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications