நரிக்குறவர்கள் நல வாரியம் அமைப்பு-அரசு உத்தரவு
சென்னை: தமிழக அரசு நரிக்குறவர்கள் நல வாரியத்தை அமைத்து, அதற்கு உறுப்பினர்களையும் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழக சட்டப்பேரவையில் 20.3.2008 அன்று அளிக்கப்பட்ட இவ்வாண்டின் நிதிநிலை அறிக்கையில், "நரிக்குறவர்களை, நல்ல நெறிக்குறவர்கள் என்று அழைத்து, அவர்கள் பல்வேறு இடங்களுக்கும் அலைந்து திரியாமல், ஓரிடத்தில் இருந்து வாழ வேண்டும் என்பதற்காக அவர்களுக்கென தி.மு.க. ஆட்சியில் திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் ஒன்றியம், தேவராயநேரி என்னும் இடத்தில் கட்டப்பட்ட 140 குடியிருப்புகளை 13.3.1975 அன்று முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார்.
இருப்பினும், நரிக்குறவர்கள் இன்றும் நாடோடிகளாகவே வாழ்ந்து வருகின்றனர். மேலும், அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் இவர்களை இன்னும் சென்றடைய இயலாத நிலை உள்ளது. இவர்களுக்குக் கல்வி, மாற்றுத் தொழில் புரிவதற்கான உதவி ஆகியவற்றை அளிக்கவும், அவர்களுக்குப் பல்வேறு நல உதவிகளை வழங்குவதற்கும் தனி நலவாரியம் ஒன்று அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பினை நிறைவேற்றும் வகையில், "தமிழ்நாடு நரிக்குறவர்கள் நலவாரியம்'' என்னும் புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது,
அதன் தலைவராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் செயல்படுவார். உறுப்பினர்-செயலராக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல ஆணையர் இருப்பார்.
அலுவல் சார்ந்த உறுப்பினர்களாக, நிதித் துறைச் செயலாளர், வருவாய்த் துறைச் செயலாளர், சமூகநலத் துறை செயலாளர், பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர், ஆதிதிராவிடர் நலத்துறைச் செயலாளர், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறைச் செயலாளர், பள்ளிக் கல்வி இயக்குநர், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை இயக்குநர் ஆகியோர் செயல்படுவார்கள்.
அலுவல்சாரா உறுப்பினர்களாக, விழுப்புரம் மா.சங்கர், வடலூர் ஏ.கே.பாபு, சென்னை பி.எம்.ஜே.ராஜ்குமார், பெரம்பலூர் ஆர்.சிவகுமார், புதுக் கோட்டை எஸ்.இராஜேந்திரன், திருச்சி எஸ்.ஜீவா, கடலூர் எம்.பாண்டியன், கோவை டி.சேகர், சேலம் எஸ்.ரவிச்சந்திரன், திருவண்ணாமலை என். காசியம்மாள் ஆகியோரை நியமனம் செய்து முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications