நாமக்கல்லில் பெண் சிசு கொலை: தாய்- பாட்டி கைது
நாமக்கல்: மீண்டும் ஒரு பெண் சிசு கொலை நடந்துள்ளது. அந்த குழந்தையை எருக்கம்பால் கொடுத்து கொலை செய்த தாய், பாட்டியை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள அக்கலாம்பட்டியை சேர்ந்த லாரி டிரைவர் பெரியசாமி (33)- சாந்தி (28) தம்பதிக்கு மோனிகா (5), ஹேமா (3) ஆகிய இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 26ம் தேதி இவர்களுக்கு இன்னொரு பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தை சில நாட்களில் திடீரென இறந்து போனது.
குழந்தையை பெற்றோர் சுடுகாட்டில் புதைத்தனர். ஆனால், நாமக்கல்லை சேர்ந்த பிரபு என்பவர் அந்த குழந்தையின் சாவில் சந்தேகம் இருப்பதாக கலெக்டரிடம் புகார் தந்தார்.
இது குறித்து விசாரிக்கு போலீசாருக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து குழந்தையின் உடலை போலீசார் தோண்டி எடுத்து எலும்புகளை ரசாயன பரிசோதனைக்காக சென்னை-கோவைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த பரிசோதனைகளில் குழந்தை எருக்கம்பால் தரப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதியானது.
இதையடுத்து தாய் சாந்தி, பாட்டி அருக்காணி (55) இருவரையும் போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கொல்லப்பட்ட குழந்தையின் தந்தை பெரியசாமி தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.