அழகிரிக்கு பதவி இல்லை-திமுக பொதுக்குழு
கட்சித் தேர்தலை முழுமையாக முடிக்கும் வரை தற்போதுள்ள நிர்வாகிகளில் எந்த மாற்றமும் செய்வதில்லை என்று திமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து இன்று நிறைவேற்றப்பட்ட19வது தீர்மானத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.
அதில், ஐந்தாண்டுகளுக்கு மேற்படாத கால அளவில் திமுக அமைப்பு தேர்தல்கள் நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால் குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் தேர்தலை நடத்தி முடிக்க முடியாமல் மழை, வெள்ளம், புயல் போன்ற தவிர்க்க இயலாத காரணங்கள் தடையாக ஆகிவிட்டமையால் வரும் 2008ம் ஆண்டு இறுதிக்குள் முழுமையாக கட்சித் தேர்தல்களை நடத்தி முடித்து விடுவது என்றும், அதுவரை ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் தொடர்ந்து பதவி வகிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மு.க.அழகிரிக்கு கட்சியில் பொறுப்பு தர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொய்த்துப் போய் விட்டது.
அழகிரிக்கு துணைத் தலைவர் பதவியை அளிக்கலாம் என முன்னதாக தீர்மானிக்கப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால் அதற்கு ஸ்டாலின் தரப்பும், சேலம் மாவட்டத்து மூத்த அமைச்சரும் சம்மதிக்கவில்லை என்று தெரிகிறது.
எனவேதான் எந்தப் பிரச்சினையும், விரிசலும், மோதலும் வந்து விடக் கூடாது என்ற எண்ணத்தில் அழகிரிக்குப் பதவி அளிப்பதில்லை என்ற முடிவுக்கு கட்சி மேலிடம் வந்ததாகக் கூறப்படுகிறது.