தமிழகத்தில் கம்யூனி்ஸ்டுகளுக்கு பாதுகாப்பில்லை
எட்டயபுரம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு தமிழகத்தில் பாதுகாப்பே இல்லாமல் போய் விட்டது என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.
எட்டயபுரத்தில் ஏஐடியுசி வட்டார அனைத்து வாடகை மோட்டார் வாகன ஓட்டுனர் சங்கம் சார்பில் மே தின விழாவை முன்னிட்டு பேரணி, பொதுகூட்டம் ஏஐடியுசி ஓட்டுனர் சங்கம் கொடியேற்று விழா, சங்க பெயர் பலகை திறப்பு விழா மற்றும் நலவாரிய அட்டை வழங்கும் விழா நடந்தது.
எட்டயபுரம் பாரதி மணி மண்டபத்திலிருந்து ஓட்டுனர் சங்க தலைவர் ஜெகநாதன் தலைமையில் மாதர் சம்மேளன மாவட்ட தலைவர் கஸ்தூரி முன்னிலையில் மே தின பேரணி நடந்தது.
இதில் இந்திய கம்யூ மாநில செயலாளர் தா. பாண்டியன் பேசியதாவது, கம்யூனிஸ்ட் இயக்கத்தை வளர்ந்த தலைவர்கள் கே. பாலதண்டாயுதம், மோகன் குமாரமங்கலம் ஆகியோர் விமான விபத்தில் மரணமடைந்த நிறைவு நாளான இன்று மே தினம் நடைபெறுகிறது.
கள்ளச் சாரயம் விற்பதை கண்டித்தும், துண்டு பிரசுரங்கள் வெளியிட்டும் பொது கூட்டங்கள் மூலமாக விளக்க பிரச்சாரம் சேலத்தில் கடந்த 13ம் தேதி நடந்தது. போலீசாருக்கு கள்ளச் சாரய கும்பல் நடவடிக்கை பற்றிய தகவலும் தரப்பட்டது. நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கையும் விடப்பட்டது. போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கள்ளச் சாரய கும்பலுக்கு எதிராக புகார் கொடுத்தற்காக சேலம் மாவட்டம் எருமாபாளையத்தில் கடந்த 28ம் தேதி நள்ளிரவில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற சேலம் மாநகர துணை செயலாளர் சிவகுமார் கள்ளச்சாரய கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் மணல் திருட்டை எதிர்த்து புகார் செய்த நெல்லை மாவட்டம் அரிகேசநல்லூரை சேர்ந்த சுடலைமுத்து வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதை தொடர்ந்து மார்ச் மாதம் திருவாரூர் மாவட்டம் மாங்குடி பஞ் தலைவர் ஜெயக்குமார் கள்ளசாரய விற்பனையை எதிர்த்து புகார் தந்ததால் பட்டபகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இந்த மூன்று படுகொலைக்கும் போலீசாரிடம் முன்கூட்டியே தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்திய கம்யூ கட்சியினருக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லாததையே இது காட்டுகிறது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications