குழந்தை தொழிலாளர்: இங்கிலாந்து நிறுவன ஆர்டர் ரத்து-அதிர்ச்சியில் திருப்பூர்
திருப்பூர்: பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்களில் குழந்தை தொழிலாளர்களை பயன்படுத்தியதால் 3 நிறுவனங்களுக்கு இங்கிலாந்து நிறுவனம் ஆர்டர்களை ரத்து செய்துவிட்டது. இதனால் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
திருப்பூரிலுள்ள 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்களில் நேரடி மற்றும் மறைமுகமாக சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் வேலை பார்க்கின்றனர்.
ஆண்டுக்கு ஏற்றுமதி வர்த்தகம் மூலம் ரூ.11,000 கோடி அன்னிய செலாவாணியும், உள்நாட்டு வர்த்தகம் மூலம் ரூ.5,000 கோடியும் வருவாய் ஈட்டும் வணிக கேந்திரமாக விளங்குகிறது திருப்பூர்.
இந் நிலையில் குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தியதாகக் கூறி 3 பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இங்கிலாந்து நாட்டிலுள்ள ஒரு நிறுவனம் ஆர்டர்களை ரத்து செய்துள்ளது. இதனால் திருப்பூரில் உள்ள அந்நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
சம்பந்தபட்ட இங்கிலாந்து நிறுவனம் தொடர்ந்து 25 ஆண்டாக வருடத்திற்கு ரூ.450 கோடி அளவு திருப்பூரில் உள்ள 50க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு ஆர்டர்கள் கொடுத்து வருகிறது. இந்த நிறுவனத்தின் ரத்து நடவடிக்கை மற்ற நிறுவனங்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ஏ.சக்திவேல் கூறுகையில்,
திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் எம்ராயிடரிங், சீக்வன்ஸ், அயனிங், பேக்கிங் உள்ளிட்ட வேலைகளை செய்து தர சுற்று வட்டாரத்திலுள்ள சிறிய நிறுவனங்களுக்கு ஜாப்-ஒர்க் கொடுப்பது வழக்கம்.
அவ்வாறு எம்ராயிடரிங் பணிகள் செய்து தர ஈரோடு பகுதி அகதிகள் முகாமிற்கு கொடுத்த வேலைகளை பள்ளிக்கு செல்லும் அவர்களது வீட்டுக் குழந்தைகள் செய்துள்ளனர்.
அவற்றை சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தவறான கண்ணோட்டத்தில் ஒரு ஆங்கில தொலைக்காட்சிக்கு செய்தியாக்க் கொடுத்ததால் இங்கிலாந்து நிறுவனம் ஆர்டர்களை ரத்து செய்துவிட்டது.
ஆனால், திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களைப் பொருத்தவரை 100 சதவீதம் குழந்தை தொழிலாளர்களே இல்லை. அடிக்கடி ஏற்படும் இப்பிரச்னைக்கு தொடர்பாக திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் மூலம் குழு அமைக்கப்பட்டு ஜாப்ஒர்க் கொடுக்கப்பட்ட பணிகளையும் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் சக்திவேல்.












Click it and Unblock the Notifications