காணாமல் போன 7 மீனவர்களின் குடும்பங்களுக்கு அரசு நிதியுதவி
சென்னை: நாகை மாவட்டத்தைச் சேர்ந்த, கடலுக்கு மீன் பிடிக்கப் போனபோது காணாமல் போன 7 மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 1லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன ஏழு மீனவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் கருணாநிதி தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க ஆணையிட்டார்.
அக்கரைப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த செண்பகம், மணிவண்ணன், ஆறுமுகம், சதீஷ், வைத்தியலிங்கம், கலியபெருமாள் மற்றும் ராமையன் ஆகியோர் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று காணவில்லை என்று அறிக்கை பெற்ற பின் மீன்வளத் துறை, கடலோரக் காவல்படை மூலமாக தீவிர தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்ட பிறகும் அவர்கள் கண்டுபிடிக்கப்பட இயலவில்லை.
எனவே அந்தக் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டதோடு, அந்தக் குடும்பத்தினரின் வறுமை நிலையைக் கருத்தில் கொண்டு, முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க முதல்வர் கருணாநிதி ஆணையிட்டார்.
அவரது உத்தரவுக்கு இணங்க பால் வளத்துறை அமைச்சர் மதிவாணன் அந்த 7 மீனவ குடும்பங்களுக்கும் தலா ரூ.1 லட்சம் நிதியுதவியை நேரில் வழங்கினார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.