ஊரை விட்டு தள்ளி வைக்கப்பட்ட ஆசிரியர் குடும்பம்!
முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே உள்ள கிராமத்தில் எடுக்கப்பட்ட கட்டப் பஞ்சாயத்து முடிவால் ஊருக்குள் நுழைய முடியாமல் கடந்த ஒரு வருடமாக பரிதவித்து வருகிறது ஆசிரியர் குடும்பம் ஒன்று.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ளது பள்ளப்பச்சேரி கிராமம். இங்கு 300 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதே கிராமத்தில் மாணிக்கம் என்பவர் தனது மனைவி ஈசம்மாள், மகன் பாலமுருகன், மருமகள் லதா, பேத்தி யாழினி, மகள் கனிமொழி, பேரன் அஜீத்குமார் ஆகியோருடன் வசித்து வருகிறார். பாலமுருகன் அரசு ஆசிரியர்.
இந்நிலையில் கடந்த 3.6.2007 அன்று கோவில் திருவிழா நடைபெற்றுள்ளது. அப்போது, பாலமுருகன் வீட்டில் கரண்ட் இல்லையென்று மின் ஊழியர்களை அழைத்து வந்திருக்கிறார். அப்போது திருட்டுத்தனமாக கோவில் விழாவிற்கு கரண்ட் எடுத்திருப்பது தெரிய வந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
திருட்டுத்தனமாக கரண்ட் எடுத்து விட்டதை காட்டிக்கொடுத்து விட்டதாக பாலமுருகன் குடும்பத்தார் மீது கிராமத்தினர்கோபம் கொண்டனர்.
இதனால் கிராமத்தினருக்கும் ஆசிரியர் பாலமுருகன் குடும்பத்தினருக்கும் தகராறு ஏற்பட்டு அதன் பயனாக அவர் குடும்பத்தை தள்ளி வைத்துள்ளனர்.
கிராமத்தில் உள்ள கடைகளில் பொருட்கள் வாங்கவும், கிணற்றில் தண்ணீர் எடுக்கவும் தடை செய்துள்ளனர். மேலும் அக்குடும்பத்திற்கு ரூ. 25,000 அபராதமும் விதித்துள்ளனர்.
இதனால் ஆசிரியர் குடும்பம் ஒரு வருடமாக சொந்த வீட்டில் தங்க முடியாமல் தவித்துக் கொண்டுள்ளனர்.
மாணக்கர்களுக்கு கல்வி வெளிச்சம் கொடுக்கும் ஆசிரியர் குடும்பத்தினரை, திருட்டு மின்சாரம் காரணமாக தள்ளி வைத்தது நியாயமா என்று பாலமுருகன் குடும்பத்தினர் குமைந்து கொண்டுள்ளனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications