முழு ஆதரவு-சமாஜ்வாடி: மருத்துவமனையில் முலாயம்!
டெல்லி: அணு சக்தி ஒப்பந்தத்தை நாட்டின் நலன் கருதி ஆதரிக்கிறோம். மத்திய அரசுக்கு இந்த விவகாரத்தில் சமாஜ்வாடி கட்சி முழு ஆதரவு அளிக்கும். நம்பிக்கை வாக்கெடுப்பு கோரப்பட்டால் அதற்கு சமாஜ்வாடி முழு ஆதரவு அளிக்கும் என அக்கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக மத்திய அரசுக்கும், இடதுசாரிகளுக்கும் இடையே நிலவி வந்த சூடான பனிப்போர், சத்தம் இல்லாமல் சமாஜ்வாடி உள்ளே புகுந்ததால் நீர்த்துப் போனது.
முலாயம் சிங் யாதவை வளைத்து விட்ட காங்கிரஸ், இடதுசாரிகளை ஓரம் கட்டத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து முலாயம் சிங்யாதவும், கட்சிப் பொதுச்செயலாளர் அமர்சிங்கும், பிரதமர் மற்றும் சோனியா காந்தியை சந்தித்துப் பேசினர்.
இருப்பினும் மத்திய அரசுக்கு ஆதரவு அளிப்பதாக வெளிப்படையாக சொல்லாமல்இருந்து வந்தது சமாஜ்வாடி. இதனால் காங்கிரஸ் வட்டாரத்திலும் லேசான பதட்டம் இருந்து வந்தது.
இந்த நிலையில் முறைப்படி அரசுக்கு ஆதரவளிப்பதாக இன்று சமாஜ்வாடி கட்சி தெரிவித்து விட்டது. இன்று காலை சமாஜ்வாடி கட்சியின் முக்கியத் தலைவர்கள் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில், மத்திய அரசுக்கு அணு சக்தி ஒப்பந்த விவகாரத்தில் ஆதரவளிக்க தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத்திற்குப் பின்னர் அமர்சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில், அணு சக்தி ஒப்பந்தம் நாட்டு நலனுக்கு உகந்தது, அவசியமானது என்று முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் தெளிவாக கூறியுள்ளார். அதை நாங்கள் முழுமையாகஏற்கிறோம்.
நாட்டின் நலன் கருதி, மக்களின் நலன் கருதி மத்திய அரசுக்கு அணு சக்தி ஒப்பந்த விவகாரத்தில்ஆதரவு அளிக்க தீர்மானித்துள்ளோம். லோக்சபாவில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரப்பட்டால் அரசுக்கு ஆதரவாக வாக்களிப்போம்.
கட்சியின் முடிவை நாடாளுமன்ற கட்சிக்குத்தெரிவிக்கும் வகையில், நாளை நாடாளுமன்ற சமாஜ்வாடி கட்சிக் கூட்டம் நடைபெறும் என்றார்.
சமாஜ்வாடி தனது முடிவை வெளிப்படையாக அறிவித்து விட்டதால் டெல்லியில் இதுவரை நிலவி வந்த தகிப்புத் தன்மை குறைந்துள்ளது. அரசுக்கு ஆபத்தில்லை என்ற நிம்மதி காங்கிரஸுக்கு ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனையில் முலாயம்:
இதற்கிடையே இன்று திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து சமாஜ்வாடி கட்சி்த் தலைவர் முலாயம் சிங் யாதவ், டெல்லி அகில இந்திய மருத்துவ ஆய்வு மையத்தில் சேர்க்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications