இஸ்லாமிய பெண்களை படிக்க வையுங்கள்: ஆர்க்காடு
திருச்சி: பெண் குழந்தைகளின் கல்வியில் அனைவரும் அக்கறை காட்ட வேண்டும். குறிப்பாக இஸ்லாமியர்கள் பெண்களை பெரிய படிப்பு படிக்க வைக்க வேண்டும் என்றார் தமிழக மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே பூதக்குடியில், எம்.ஏ.ஆர். பொறியியல் கல்லூரியை சனிக்கிழமை தொடக்கி வைத்தும், ஹாஜியானி ஹவ்வாபி நினைவு கட்டடத்தை திறந்து வைத்தும் மேலும் அவர் பேசியது:
திமுக ஆட்சியில் பல தொழில்சாலைகள் தொடங்கப்பட்டுள்ளன. ரூ. 50 லட்சம் முதலீட்டுடன் தொழிலைத் தொடங்கினால் தமிழக அரசு 15 சத மானியம் அளிக்கிறது. மேலும், மின்சாரத்திலும், வணிகவரியிலும் சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் பலருக்கு வேலைவாய்ப்பையும் அளிக்க முடியும்.
பெண் குழந்தைகளைப் படிக்க வைத்து அவர்களைப் பொறியாளராக, மருத்துவராக, ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளாக ஆக்குங்கள்.
தமிழகத்தில் உள்ள பொறியியல், மருத்துவக் கல்லூரிகளில் படித்து விட்டு வெளிநாடுகளுக்குச் சென்று வேலை செய்யும் நிலை உள்ளது. ஆனால், இனிமேல் அந்த நிலை இருக்காது. தமிழகத்தில் படிக்கும் மாணவர்களுக்குத் தமிழகத்திலேயே வேலை கிடைக்கும் வாய்ப்பை முதல்வர் கருணாநிதி உருவாக்கியுள்ளார்.
ரூ. 2 லட்சம் கோடி முதலீட்டில் தமிழகத்தில் தொழில் தொடங்க பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் இதுவரை 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை தமிழக அரசுடன் மேற்கொண்டுள்ளது.
வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவின் மற்ற மாநிலங்களையெல்லாம் விட்டு, தமிழகத்தில் தொழில் தொடங்க காரணம் நல்ல முதல்வர், நல்ல அரசு, தொழில் அமைதி, அடிப்படை வசதிகள் போன்றவைகள்தான்.
பொறியியல் கல்லூரிகளில் முன்பு சிவில், மெக்கானிக்கல், எலக்டிரிக்கல் போன்ற பிரிவுகளில்தான் மாணவர்கள் அதிகளவில் சேருவார்கள். ஆனால், தற்போது அத்துறைகளையெல்லாம் விட்டு, தகவல் தொழில்நுட்பவியல், கணினி அறிவியல், மின்னணு தகவல் பொறியியல் துறை போன்ற துறைகளில்தான் சேர மாணவர்கள் அதிக நாட்டம் கொண்டுள்ளனர்.
உலகின் வேகமான வளர்ச்சிக்கு நாமும் முன்னேற, புதிய பாடங்களைக் கற்க வேண்டிய நிலையில் உள்ளோம்.
திருச்சியில் அடுத்தாண்டு மத்திய பல்கலைக்கழகம் வர உள்ளது. இந்த பல்கலைக்கழகம் அமைந்தால் திருச்சியிலே மாணவர்கள் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள முடியும். இதுபோல், திருச்சியில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா விரைவில் அமைய உள்ளது. இதன் மூலம் மாணவர்களுக்கு உடனடியாக வேலைவாய்ப்பு கிடைக்கும்.
திமுக அரசில் 3 ஆண்டுகளில் 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புத் தரவும் திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன.
மாணவர்கள் கல்வியில் நாட்டத்தைச் செலுத்துங்கள். நேரத்தை வீணடிக்காதீர்கள். சொந்தமாக முயற்சியை மேற்கொள்ளுங்கள் என்றார் அமைச்சர் ஆர்க்காடு நா. வீராசாமி.
விழாவுக்கு, எம்.ஏ.ஆர். பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரித் தலைவர் அ. முகமது யூனுஸ் தலைமை வகித்தார். போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு, வனத் துறை அமைச்சர் என். செல்வராஜ் ஆகியோர் பேசினர்.
கல்லூரிச் செயலர் எம்.ஒய். அப்துல் ஜலீல் வரவேற்றார். கல்லூரி அறங்காவலர் ஏ. கமால் பாட்சா நன்றி கூறினார்.












Click it and Unblock the Notifications