அஜீத்சிங்: இழுக்க கம்யூ முயற்சி-ஏர்போர்ட்டுக்கு சரண்சிங் பெயர் வைத்து அமுக்கிய காங்!
டெல்லி: ராஷ்டிரிய லோக் தளம் கட்சி தலைவர் அஜீத் சிங், இடதுசாரிகள் பக்கம் போகக் கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், லக்னோ விமான நிலையத்திற்கு அஜீத் சிங்கின் தந்தையும், முன்னாள் பிரதமருமான சரண் சிங்கின் பெயர் சூட்டப்படுவதாக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.
நம்பிக்கை வாக்கெடுப்புக்கு நாள் நெருங்கி வரும் நிலையில், 3 எம்.பிக்களை வைத்துள்ள அஜீத் சிங்கின் ராஷ்டிரிய லோக்தளத்தை தங்களது பக்கம் இழுக்கும் முயற்சியில், இடதுசாரிகள் இறங்கியுள்ளனர். அதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் பரதன் இன்று அஜீத் சிங்கை சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பு நடந்த சில மணி நேரங்களிலேயே அஜீத்சிங்குக்கு சாதகமான ஒரு அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. லக்னோ விமான நிலையத்திற்கு செளத்ரி சரண் சிங் விமான நிலையம் என பெயர் சூட்டப்படுவதான அறிவிப்பு அது.
இதுதொடர்பான முடிவை இன்று கூடிய அமைச்சரவைக் கூட்டம் எடுத்தது. இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசுகையில், மக்களின் உணர்வுகளை மதித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஏழாவது பிரதமரும், சுதந்திரப் போராட்ட வீரரும், விவசாயிகளின் தலைவருமான சரண் சிங்குக்கு அரசு செலுத்தும் அஞ்சலி இது.
அஜீத் சிங்கிடமிருந்து வந்த நெருக்கடியைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட முடிவு அல்ல இது. மேலும், அஜீத்சிங் கட்சியின் ஆதரவைப் பெறுவதற்காக எடுக்கப்பட்ட முடிவும் கிடையாது. முற்றிலும் அரசியல் சார்பற்ற முடிவு இது என்றார் சிதம்பரம்.
நம்பிக்ைக வாக்கெடுப்பில் காங்கிரஸ் அரசை ஆதரிக்க அஜீத் சிங், முன்வைத்த கோரிக்கைகளில், சரண்சிங்கின் பெயர லக்னோ விமான நிலையத்திற்கு சூட்ட வேண்டும் என்பதும் ஒன்று என்பது நினைவிருக்கலாம்.
பரதன் சந்திப்பு, அதைத் தொடர்ந்து மத்திய அரசு வெளியிட்டுள்ள விமான நிலையப் பெயர் அறிவிப்பு ஆகியவற்றால், அஜீத் சிங் என்ன முடிவை எடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications