ராமர் பாலம்: புதி்ர் போடும் அரசு-ராம கோபாலன்
ராமேஸ்வரம்: யார் ஆட்சிக்கு வந்தாலும் ராமர் பாலத்தை உடைக்க விட மாட்டோம் என்று இந்து முன்னணி அமைப்பாளர் ராம. கோபாலன் கூறியுள்ளார்.
ராமேஸ்வரத்தில் அவர் கூறியதாவது:
ராமர் பாலத்தை உடைக்க அரசு அதிக ஆர்வம் காட்டி வருகிறது. ஒவ்வொரு நாளும் புதுப்புது புதிர்களைச் சொல்லி வருகின்றனர். யார் ஆட்சிக்கு வந்தாலும் ராமர் பாலத்தை உடைக்க அனுமதிக்க மாட்டோம்.
சேது கால்வாய்ப் பணிகள் 60 சதவீதம் முடிந்து விட்டதாக அமைச்சர் ஆற்காடு வீராசாமி சொல்கிறார். ஆனால், ராமர் பாலம் பகுதியில் எந்தப் பணியும் நடக்கவில்லை என்று திட்டத் தலைவர் சுரேஷ் டிவியில் அளித்த பேட்டியில் தெரிவிக்கிறார். எது உண்மை, எது பொய் என்பது தெரியவில்லை.
தற்போது குஜராத், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் தொடர் குண்டுவெடிப்பு நடத்துள்ளது. பாகிஸ்தான் மறைமுகமாக நம் மீது போர் தொடுத்துள்ளதாகக் நினைக்கிறேன்.
வெடிகுண்டு தாக்குதல் நடத்தியவர்களை இந்த அரசு கடுமையாகத் தண்டிக்க வேண்டும். பொடா சட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும்.
ராமேஸ்வரம் கோயில் ஸ்படிகலிங்க தரிசனத்துக்கு பக்தர்களிடம் ரூ.50 கட்டணம் வசூல் செய்து வருவதை நிறுத்த வேண்டும்.
மெக்கா செல்ல அரசு மானியம் வழங்குகிறது. அதே போன்று, திருச்செந்தூர், பழனி, மதுரை, சிதம்பரம், வைத்தீஸ்வரன் கோயில் போன்ற தலங்களுக்குச் செல்லும் இந்து பக்தர்களுக்கும் அரசு மானியம் வழங்க வேண்டும் என்று அவர் கூறினார்.