அமைச்சரின் பிடியில் இல்லை: 'கடத்தப்பட்ட' சிவபாலன்
ஈரோட்டைச் சேர்ந்த பழனிச்சாமி - மலர் விழி தம்பதியினர் சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி, தங்களை சொத்தைக் கேட்டு கைத்தறித் துறை அமைச்சர் என்.கே.கே.பி ராஜா மிரட்டுவதாகவும், தங்களையும், தங்களது மகன் சிவபாலனையும் அவர் கடத்தியதாகவும் பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர். தங்களது மகன் சிவபாலன் தொடர்ந்து அமைச்சரின் பிடியில்தான் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.
இதுதொடர்பாக மாநில மனித உரிமை ஆணையத்திலும் அவர்கள் புகார் கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில் சம்பந்தப்பட்ட சிவபாலன் நேற்று இரவு திடீரென ஈரோட்டில் செய்தியாளர்களை அழைத்துப் பேசினார். 2 பேருடன் வந்த சிவபாலன் செய்தியாளர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளிக்கவில்லை.
மாறாக நான் அமைச்சரின் கஸ்டடியில் இல்லை. சுதந்திரமாக இருக்கிறேன். நண்பர்களுடன் பெருந்துறை, கோவை, திருப்பூர் போன்ற ஊர்களுக்குப் போயிருந்தேன். எனது தாயார் கொடுத்துள்ள புகார் தவறானது. டிவி செய்தியைப் பார்த்து விட்டுத்தான் வந்தேன். கோர்ட்டில் வழக்கு உள்ளதால் மேற்கொண்டு பேச விரும்பவில்லை. கோர்ட்டில் பேசிக் கொள்கிறேன் என்று கூறி விட்டு விருட்டென கிளம்பி விட்டார்.
உங்களுடன் வந்திருப்பது யார், யார் உங்களுடைய நண்பர்கள் போன்ற கேள்விகளுக்கு அவர் பதில் சொல்ல மறுத்து விட்டார்.
என்கேகேபி ராஜாவுக்கு பயந்தே அவர் இவ்வாறு பேசியதாகத் தெரிகிறது.
தொடர்பான செய்திகள்:
கடத்தல் புகார்: அமைச்சர் ராஜா டிஸ்மிஸ்!
ராஜா மீது மனித உரிமை கமிஷனில் புகார்