தொடங்கியது அரசியல் வாழ்க்கை: கட்சி அலுவலகம் திறந்தார் சிரஞ்சீவி

தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி அரசியலில் குதிக்கிறார்.
கட்சி தொடங்குவதற்கான ஏற்பாடுகளை அவரது மைத்துனர் அல்லு அரவிந்த், சகோதரர்கள் பவன் கல்யாண், நாகேந்திரபாபு ஆகியோர் செய்து வருகிறார்கள்.
இந் நிலையில் ஹைதராபாத் ஜூபிளி ஹில்ஸ் பகுதியில் இன்று அதிகாலை தனது கட்சி அலுவலகத்தை திறந்தார் சிரஞ்சீவி. இதில் சிரஞ்சீவியின் தாய் அஞ்சனா தேவி, மனைவி, மகன் ராம்சரன் தேஜா உள்பட குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் மிகவும் முக்கியமானவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
சிரஞ்சீவி கட்சியின் தொடக்க விழா திருப்பதியில் 22ம் தேதி நடக்கிறது. விழா நடைபெறும் இடத்தை தேர்வு செய்யும் பணியில் சிரஞ்சீவி மைத்துனர் அல்லு அரவிந்த் ஈடுபட்டுள்ளார்.
இவ்விழாவில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கட்சி தொடக்க விழாவில் கட்சி பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை சிரஞ்சீவி அறிவிக்கிறார்.
மறைந்த ஆந்திர முன்னாள் முதல்வரும், நடிகருமான என்.டி.ராமாராவ், தனது தெலுங்கு தேசம் கட்சி தொடக்க விழாவை திருப்பதியில்தான் நடத்தினார். மேலும் ஒவ்வொரு தேர்தலின்போதும் பிரசாரத்தை திருப்பதியில் இருந்துதான் தொடங்குவார்.
தற்போது சிரஞ்சீவியும் என்.டி.ஆர். வழியில் தனது கட்சி தொடக்க விழாவை திருப்பதியில் தொடங்குகிறார்.












Click it and Unblock the Notifications