ராட்சத மரம் சாய்ந்து ஊட்டியில் போக்குவரத்து பாதிப்பு
ஊட்டி: ஊட்டியில் பெய்து வரும் கன மழையால் ராட்சத மரம் ஒன்று நேற்று சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் கர்நாடகா மற்றும் கேரளாவுக்கான போக்குவரத்து பாதித்தது. சுற்றுலா பயணிகளும் பெரும் பாதிப்புக்கு உள்ளாயினர்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 15 தினங்களுக்காக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. ஊட்டி, நடு வட்டம், பைக்காரா, மஞ்சூர், எமரால்டு போன்ற பல பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பயங்கர காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது.
நேற்று முன்தினம் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் ஊட்டி - கூடலூர் சாலையில் உள்ள அனுமாபுரம் மற்றும் பைக்காரா பகுதியில் 2 ராட்சத மரங்கள் மரங்கள் வேரோடு சாயந்து விழுந்தன. இவற்றை நெடுஞ்சாலைத் துறையினர் உடனடியாக அகற்றினர்.
இந்நிலையில் பைக்காரா அருகே நேற்று காலை 4 மணியளவில் மீண்டும் ஒரு ராட்சத மரம் வேறோடு சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இந்த சாலை வழியாக கர்நாடக மாநிலம் மைசூர், பெங்களூர் மற்றும் கேரள மாநிலம் கள்ளிக்கோட்டை, நிலம்பூர், பத்தேரி போன்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டும்.
மரம் விழுந்ததால் இந்த சாலை வழியாக வாகனங்கள் செல்ல முடியவில்லை. சாலையின் இருபுறங்ளிலும் நீண்ட வரிசையில் 400க்கும் மேற்பட்ட வாகனங்கள் தேங்கி நின்றன. காலை 7 மணி வரை மரம் அகற்றும் பணி தொடங்காததால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாயினர்.
தகவலறிந்த நெடுஞ்சாலைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காலை 9 மணியளவில் மரத்தை அப்புறப்படுத்தினர்.
இந்த சாலை கர்நாடகா, கேரளாவைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். மரம் விழுந்த பகுதி அடர்ந்த வனப்பகுதி என்பதால் காட்டு விலங்குகளுக்கு அஞ்சி பயணிகள் தவித்தனர்.












Click it and Unblock the Notifications