தடை செய்யப்பட்ட வன பகுதியில் 'வைர வேட்டை'-2 பேர் கைது
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் தடை செய்யப்பட்ட பகுதியில் வைரத்தை தேடிச் சென்ற இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் பல அபூர்வமான விலை உயர்ந்த மரங்களும், வன விலங்குகளும் உள்ளன. இதனால் அப்பகுதியி்ல பொது மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
வனப்பகுதியில் உள்ள அரிய வகை மரங்கள் பல ஆண்டுகளுக்கு முன் மண்ணில் புதைந்ததாகவும், அந்த மரங்கள் தற்போது வைரமாக மாறியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் தடையை மீறி அப்பகுதிக்குள் செல்ல அடிக்கடி சிலர் முயன்று வருகின்றனர்.
இந் நிலையில் அந்த பகுதியில் இருவர் நுழைந்தபோது, வனத்துறையினர் அவர்களை பின் தொடர்ந்து சென்றனர். அவர்கள் மரங்கள் புதைந்துள்ள பகுதியில் மண்ணை தோண்டியபோது வனத்துறை போலீசார் அவர்களை கையும் களவுமாக பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் நகை கடை ஊழியர்கள் கிருஷ்ணன், சுந்தரேசன் என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இன்னும் பலர் வைர வேட்டையில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. அவர்களையும் கைது செய்ய போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications