பிந்த்ராவுக்கு தமிழக அரசு ரூ. 5 லட்சம் பரிசு
சென்னை: துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம் பெற்றுத் தந்த அபினவ் பிந்த்ராவுக்கு தமிழக அரசின் சார்பில் ரூ. 5 லட்சம் பரிசளிக்கப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், சீனத் தலைநகர் பெய்ஜிங் நகரில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டியில், ஆண்களுக்கான துப்பாக்கிச் சுடும் பிரிவில் இந்திய வீரர் அபினவ் பிந்த்ரா தங்கப்பதக்கம் வென்று ஒரு மிகப் பெரிய வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
இதுவரை நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிளில் தனிநபர் பிரிவில் இந்தியா தங்கப் பதக்கம் வென்றதில்லை. அது மட்டுமல்லாமல் கடந்த 28 ஆண்டுகளில் நடந்துள்ள ஒலிம்பிக் போட்டிகளில் எந்த ஒரு பிரிவிலும் இந்தியா தங்கப் பதக்கம் பெற்றதில்லை.
இந்தக் குறைகளை நீக்கி தனி நபர் பிரிவில் முதன் முறையாக அபினவ் பிந்த்ரா தங்கப் பதக்கம் பெற்று புதிய வரலாற்றப் படைத்துள்ளார்.
இவர் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் பிறந்தவர். தற்போது சண்டிகர் நகரில் வசித்து வருகிறார். துப்பாக்கிச் சுடும் போட்டியில், தங்கப் பதக்கம் வென்றுள்ளதன் வாயிலாக இந்தியாவுக்கு பெருமை தேடித் தந்து வரலாறு படைத்துள்ள பிந்த்ராவுக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவருக்கு தமிழக அரசின் சார்பில் ரூ. 5 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications