பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் பெண்ணுக்கு பிரசவம்
சென்னை: சென்னை வந்து கொண்டிருந்த பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது.
தென்காசியை சேர்ந்த அண்ணாமலை என்பவரின் மனைவி சாந்தி (25). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவர் சென்னையில் வசிக்கும் தன் சகோதரி வீட்டுக்கு பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்தார்.
ரயில் செங்கல்பட்டு அருகே வந்து கொண்டிருந்தபோது, சாந்திக்கு பிரசவ வலி ஏற்பட்டது. கணவர் அண்ணாமலை ரயில் டிடியிடம் தெரிவித்தார்.
அவர் தாம்பரம் ரயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தரவே, அந்த ரயில் நிலையத்தில் டாக்டர்கள் தயார் நிலையில் இருந்தனர்.
ஆனால் அதற்குள்ளாக வழியிலேயே ஓடும் ரயிலில் சாந்திக்கு ஆண் குழந்தை பிறந்தது. ரயில் தாம்பரம் வந்ததும் டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதையடுத்து அவர் வேறு வாகனம் மூலம் சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ரயிலில் கிடந்த நகை-உரியவரிடம் ஒப்படைப்பு:
இதற்கிடையே ரயிலில் கிடந்த 10 பவுன் நகையை போலீசார் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு காலை மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. பயணிகள் அனைவரும் இறங்கி சென்ற பின் பெட்டிகளில் போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது எஸ்-5 பெட்டியில் பை ஒன்று கிடந்தது. அதில், 10 பவுன் தங்க நகை, வெள்ளி கொலுசு ஆகியவை இருந்தன. அதை எழும்பூர் ரயில்வே போலீஸ் நிலையத்தில் காவலர்கள் ஒப்படைத்தனர்.
அதே நேரத்தில், பையை தவற விட்டவரான ராஜா என்பவர் மாம்பலம் ரயில் நிலைய மேலாளர் அலுவலகத்தில் அது குறித்து புகார் தந்தார்.
இதையடுத்து அந்த நபரை வரவழைத்த எழும்பூர் ரயில்வே போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி பையை ஒப்படைத்தனர்.












Click it and Unblock the Notifications