சர்தாரியின் கோரிக்கை- நிராகரித்தார் ஷெரீப்
இஸ்லாமாபாத்: மீண்டும் கூட்டணிக்குத் திரும்ப வேண்டும் என்ற ஆசிப் அலி சர்தாரியின் கோரிக்கையை நவாஸ் ஷெரீப் நிராகரித்து விட்டார்.
பாகிஸ்தான் ஆளும் கூட்டணியிலிருந்து விலகியுள்ள ஷெரீப் மீண்டும் கூட்டணிக்கு திரும்ப வேண்டும் என பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணைத் தலைவரான சர்தாரி கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் தொலைபேசி மூலம் ஷெரீப்பை தொடர்பு கொண்டும் அவர் மன்னிப்பு கேட்டார்.
இதுகுறித்து நவாஸ் ஷெரீப் கட்சி தரப்பில் கூறுகையில், ஷெரீப்பை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட சர்தாரி, கூட்டணிக்கு மீண்டும் திரும்ப வேண்டும். அதிபர் தேர்தலில் நிறுத்தியுள்ள வேட்பாளரை திரும்பப் பெற வேண்டும் என சர்தாரி கோரிக்கை விடுத்தார்.
சர்தாரி பேசியதற்காக நன்றி தெரிவித்த ஷெரீப், இப்போதைக்கு கூட்டணிக்கு மீண்டும் திரும்புவது சாத்தியமற்றது என்று சர்தாரியிடம் ஷெரீப் தெரிவித்தார். அதிபர் தேர்தலில் நிறுத்தியுள்ள வேட்பாளரை வாபஸ் பெறுவதும் இயலாத காரியம் என்றும் அவர் தெரிவித்தார்.