என்எல்சி மின் உற்பத்தி குறைந்து ஏன்?
நெய்வேலி: சுரங்கம் தோண்டுவதற்கான நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள பிரச்சனைதான் என்எல்சியில் மின் உற்பத்தி குறைவுக்கு காரணம் என்று மின்துறை இயக்குனர் சேதுராமன் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில்,
தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா ஆகிய அண்டை மாநிலங்களிலும் மின் பற்றாக்குறை நிலவி வருகிறது.
என்எல்சியை பொறுத்த வரையில் 3 அனல்மின் நிலையங்கள் மூலம் 2490 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திறன் உள்ளது. தற்போது 600 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட முதல் அனல்மின் நிலையத்தில் நேற்றைய நிலவரப்படி 400 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
இதில் 90 சதவீத மின்சாரம் தமிழக அரசுக்கு வழங்கப்படுகிறது. 420 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட முதல் அனல்மின் நிலைய விரிவாக்கத்தில் முழு அளவு உற்பத்தியும், 1470 மெகாவாட் திறன் கொண்ட 2ம் அனல் மின் நிலையத்தில் 850 மெகாவாட் மின்சாரமும் தற்போது உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்த இரு அனல் மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் 50 சதவீதம் தமிழகத்திற்கு வழங்கப்படுகிறது. மீதமுள்ள 50 சதவீத மின்சாரம், புதுச்சேரி, கர்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களுக்கு வழங்கி வருகிறோம்.
2வது அனல்மின் நிலையத்திற்கு தேவையான பழுப்பு நிலக்கரி, 2ம் சுரங்கத்தில் இருந்து பெறப்படுகிறது. தற்போது 2ம் சுரங்கத்தில் பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்க தேவையான நிலங்களை கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதுவரை கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய பணம் கொடுத்தாகிவிட்டது.
ஆனால் நிலம் எங்கள் கைவசம் வரவில்லை. நிலம் கையகபடுத்தப்பட்டு, அதன் பின் மேல் மண் நீக்கப்பட்டு ஜனவரி மாதத்தில்தான் 2ம் சுரங்கத்தில் முழு அளவு பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்க முடியும். அதன் பின்னரே 2வது அனல் மின் நிலையத்தில் முழு அளவு மின் உற்பத்தி செய்ய வாய்ப்புள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications