வேலூர் மருத்துவமனையில் கருணாகரன் அனுமதி
திருவனந்தபுரம்: முன்னாள் கேரள முதல்வர் கருணாகரன், வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்படவுள்ளது.
கேரள மாநில முன்னாள் முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான கே. கருணாகரன் சென்ற கார் ஒரு மாதத்திற்கு முன்பு விபத்தில் சிக்கியது. அதில் கருணாகரனுக்கு எந்த விதமான வெளிப்புற காயமும் ஏற்படவில்லை. ஆனால் உள் காயம் ஏற்பட்டது.
இதையடுத்து அவர் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றார். ஆனால் சிகிச்சை பலன் தராததால், திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீ சித்திரை திருநாள் மருத்துவ மையத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
தற்போது அங்கும் சிகிச்சை திருப்திகரமாக இல்லாததால் வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கருணாகரன் மாற்றப்பட்டுள்ளார்.
அவரை அவரது மகள் பத்மஜா வேணுகோபால், குடும்ப டாக்டர் உன்னிகிருஷ்ணன் ஆகியோர் வேலூருக்கு அழைத்துச் சென்றுள்ளனர். விமான ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் கொண்டு செல்லப்பட்டார் கருணாகரன்.
வேலூர் மருத்துவமனையில் கருணாகரனை டாக்டர்கள் குழு தீவிரமாக பரிசோதிக்கவுள்ளது. பின்னர் அவருக்குத் தரப்பட வேண்டிய பிசியோதெரபி சிகிச்சை குறித்து தீர்மானிக்கப்படவுள்ளது.












Click it and Unblock the Notifications