2 சரவணா ஸ்டோர்ஸ் ஊழியர்கள் கைது-உரிமையாளர்கள் தலைமறைவு?

சென்னை தியாகராய நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தில் ஏற்பட்ட பெரும் தீ 2 நாட்கள் கழித்து நேற்றுதான் அணைக்கப்பட்டது.
கோட்டைச்சாமி, ராமஜெயம் ஆகிய இரு ஊழியர்களும் காணவில்லை என்று கூறப்பட்ட நிலையில் நேற்று இருவரது உடல்களும் கருகிய நிலையில் மீட்கப்பட்டன.
விபத்து ஏற்பட்ட தினத்தன்று அதிகாலையில் இவர்கள் இருவரும் 5வது மாடியில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உயிர் தப்ப வழி தேடி அங்குமிங்கும் ஓடியுள்ளனர். ஆனால் கீழே வருவதற்கான வழியில் உள்ள ஷட்டர் மூடப்பட்டிருந்தது. இதனால் அவர்களால் வெளியில் ஓடி வர முடியவில்லை. அதற்குள் மளமளவென தீ பரவி விட்டதால் இருவரும் சிக்கிக் கொண்டனர்.
இந்த சமயத்தில் பெரிய பலகை ஒன்று இவர்கள் மீது விழுந்து கீழே அழுத்தியுள்ளது. இதனால் இருவரும் துடிதுடித்து தீயில் கருகி இறந்தனர்.
இருவரில் ஒருவரின் உடல் முற்றிலும் எரிந்து போய் எலும்புக் கூடாக காணப்பட்டது. இன்னொருவரின் உடலில் இடுப்புப் பகுதி மட்டுமே எரியாமல் இருந்தது. மற்ற பகுதிகள் எரிந்து எலும்புக் கூடாகி இருந்தன.
2 ஊழியர்கள் கைது:
இருவரும் கீழே வர முடியாமல் போனதற்கு ஷட்டர் மூடப்பட்டிருந்ததுதான் காரணம் என போலீஸார் கண்டறிந்துள்ளனர். ஷட்டரை யார் மூடியது என்று விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில் பணியில் அலட்சியமாக இருந்தது, தீயணைப்புக் கருவிகளை வைத்திருக்காதது, உயிரிழப்புக்குக் காரணமாக இருந்தது ஆகிய பிரிவுகளின் கீழ் சரவணா ஸ்டோர்ஸ் மேலாளர் செல்வம், கண்காணிப்பாளர் ஜெபசிங் ஆகியோரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
அவர்களிடம் விசாரணை நடத்திய பின்னர் மேலும் நடவடிக்கை இருக்கும் என ஆணையர் சேகர் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
உரிமையாளர்கள் தலைமறைவு?:
இதற்கிடையே, சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர்களான ராஜரத்தினம், யோகரத்தினம் ஆகிய இருவரும் தலைமறைவாகி விட்டதாகக் கூறப்படுகிறது. இருவரது சார்பிலும் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுக்கள் விசாரணையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேல் விசாரணையைத் தொடர்ந்து தேவைப்பட்டால், இரு உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை இருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
எரிந்த கட்டிடம் இடிந்து விழும் அபாயம் இருப்ப தால் அதன் அருகே செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ரங்கநாதன் தெருவில் சகஜ நிலை:
இதற்கிடையே, கடந்த 2 நாட்களாக வெறிச்சோடிக்கிடந்த ரங்கநாதன் தெரு, நேற்று பிற்பகலுக்கு மேல் சகஜ நிலைக்குத் திரும்பியது. மக்கள் நடமாட அனுமதிக்கப்பட்டது. மக்கள் கூட்டம் வழக்கம் போல அலை அலையாக சென்றது. கடைகளும் திறக்கப்பட்டு வழக்கமான வியாபாரம் தொடங்கியது.












Click it and Unblock the Notifications