தலித்களை கோவிலுக்குள் அனுமதிக்க எதிர்ப்பு-ஊரைக் காலி செய்த மக்கள்
சேலம்: சேலம் கந்தம்பட்டி திரவுபதி அம்மன் கோவிலில் தலித் மக்களை வழிபாட்டுக்கு அனுமதிப்பதை எதிர்த்து குறிப்பிட்ட ஜாதியைச் ேசர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் ஊரை விட்டு ஆடு, மாடுகள், மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறியுள்ளதால் அங்கு பதட்டம் நிலவுகிறது.
சேலம், கந்தம்பட்டியில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் 300 ஆண்டு பழமையானது. இந்தக் கோவிலில் இது நாள் வரை ஆதி திராவிட மக்கள் சாமி கும்பிட அனுமதிக்கப்படுவதில்லை. மேலும் கோவிலுக்குள் வரவும் அவர்களுக்கு அனுமதி கிடையாது.
இதையடுத்து கடந்த ஆண்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கோவிலுக்குள் நுழைந்து வழிபாடு நடத்த முயன்றனர். இதனால் பிரச்சினை உருவானது. இதைத் தொடர்ந்து கோவிலை மாவட்ட நிர்வாகம் பூட்டி சீல் வைத்தது.
இதை எதிர்த்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கோவிலை திறக்க வேண்டும். ஆதி திராவிட மக்களும் வழிபாடு நடத்த அனுமதிக்கப்பட வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதையடுத்து இன்று கோவிலைத் திறக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. முன்னேற்பாடாக கோவில் உள்ள பகுதியிலும், கிராமத்திலும் 500க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், கோவிலைதிறப்பதற்கும், ஆதி திராவிட மக்களை கோவிலுக்குள் அனுமதிப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்து குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர்கள் குடும்பத்துடன், ஆடு மாடுகள், மூட்டை முடிச்சுகளுடன் வீடுகளை விட்டு வெளியேறி ஊருக்கு வெளியே உள்ள ஒரு கோவிலில் குடியேறியுள்ளனர்.
ஆதி திராவிட மக்களை கோவிலுக்குள் அனுமதிக்கக் கூடாது. மீறி அனுமதித்தால் ஊருக்குள் வர மாட்டோம் என அவர்கள் கூறியுள்ளனர். இதனால் கந்தம்பட்டியில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications