பொதுச் செயலாளர்: ஜெ போட்டியின்றி தேர்வு
சென்னை: அதிமுக பொதுச் செயலாளராக ஜெயலலிதா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து 6வது முறையாக அவர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் உத்தரவையடுத்து அதிமுக உட்கட்சித் தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது.
அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கான அறிவிப்பு கடந்த 2ம் தேதி வெளியிடப்பட்டு, 7ம் தேதி வரை மனு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது.
8ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனையும், 9ம் தேதி வேட்பு மனு திரும்பப் பெறலாம். 10 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிப்புக் கொடுக்கப்பட்டது.
ஜெயலலிதாவுக்கு ஆதரவாக கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் மனுக்களை தாக்கல் செய்தனர். 1,000க்கும் மேற்பட்ட மனுக்கள் இவ்வாறு தாக்கலாயின.
ஜெயலலிதாவுக்கு எதிராக யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து போட்டியின்றி ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட விசாலாட்சி நெடுஞ்செழியன் இதை இன்று அறிவித்தார்.
கடந்த 1988ம் ஆண்டு அதிமுகவின் (ஜெ அணி) பொதுச் செயலாளராக ஜெயலலிதா முதன் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1989ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலுக்கு பிறகு அதிமுகவின் ஜா, ஜெ இரண்டு அணிகளும் ஒன்றாக இணைந்தன. அப்போது மீண்டும் கட்சித் தேர்தல் நடத்தப்பட்டு 2வது முறையாக பொதுச் செயலாளரானார் ஜெயலலிதா.
இதைத் தொடர்ந்து 1993, 1998, 2003 ஆகிய ஆண்டுகளிலும் ஜெயலலிதா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்போது 6வது முறையாக, தொடர்ந்து தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதன்மூலம் அதிமுகவில் அதிக ஆண்டுகள் தொடர்ந்து பொதுச் செயலாளராக பதவி வகித்தவர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
அதிமுக நிறுவனத் தலைவரான எம்ஜிஆர், கட்சியின் முதல் பொதுச் செயலாளராக 1973ம் ஆண்டு தேர்வு பெற்று 1977ம் ஆண்டு வரை பதவி வகித்தார். முதல்வரான பிறகு 1978ம் ஆண்டு முதல் நெடுஞ்செழியனும் அவரைத் தொடர்ந்து ப.உ.சண்முகம், எஸ்.இராகவானந்தம் ஆகியோரும் பொதுச் செயலாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.