இலங்கையில் இந்திய படை: 16ம் தேதி திருமா. ஆர்ப்பாட்டம்
சென்னை: தமிழர்களுக்கு எதிராக இலங்கையில் மறைமுகமாக இறக்குமதி செய்யப்பட்டுள்ள இந்திய படையினர் அனைவரையும் உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி வரும் 16ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
இலங்கை படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திய விமானத் தாக்குதலில் பலர் பலியாகியுள்ளனர். மேலும், இலங்கை படையினரும் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் 3 இந்திய பொறியாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இலங்கை ராணுவ தளத்தில் பொருத்தப்பட்டுள்ள இந்திய ரேடார் கருவிகளை இயக்குகிற பணியையும். அது தொடர்பாக இலங்கை படையினருக்கு பயிற்சி அளித்தும் வருகின்றனர்.
இந்திய அரசின் இத்தகைய தமிழின விரோதப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாக கண்டிக்கிறது. இந்தப் போக்கை உடனடியாக இந்திய அரசு கைவிட வேண்டும். அத்துடன் தமிழனத்திற்கு எதிராக ஈழத்தில் மறைமுகமாக இறக்குமதி செய்யப்பட்டுள்ள இந்திய படையினர் அனைவரையும் உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி வரும் 16ம் தேதி சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் எனது தலைமையில் நடைபெறும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications