டெல்லி குண்டுவெடிப்புக்கு ராம. கோபாலன் கண்டனம்
சென்னை: தீவிரவாத தாக்குதல்களை ஒடுக்க மத்திய அரசு தனி புலனாய்வு துறையை அமைக்க வேண்டும் என்று இந்து முன்னணி அமைப்பாளர் ராம. கோபாலன் கோரிக்கை விடுத்துள்ளார்.
டெல்லி தொடர் குண்டுவெடிப்புக்கு ராம. கோபாலன் கடும் கண்டனம் ெதரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், டெல்லியில் அடுத்தடுத்து நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. இதில் உயிரிழந்தவர்களுக்கும், படுகாயமடைந்தவர்களுக்கும் அனுதாபமும், பிரார்த்தனையும் செய்கிறது.
பெங்களூரு, ஹைதராபாத், குஜராத், அகமதாபாத், ஜெய்ப்பூர், என பயங்கரவாதத்தின் கோர தாண்டவம் டெல்லியில் அரங்கேறியிருக்கிறது. பயங்கரவாதிகள் நாங்கள் தாக்குதல் நடத்தப்போகிறோம் என முன் அறிவிப்பு செய்து வெடிகுண்டு வைக்கிற அளவுக்கு தைரியம் வந்துள்ளதற்கு யார் காரணம்?
ஓட்டுக்காக பேசக் கூடாது:
பிஜேபிக்கு செல்வாக்கு குறையும்போது குண்டுவெடிப்பு சம்பவம் நடக்கும் என்று சில பத்திரிகைகளும், பிஜேபி ஆளும் மாநிலங்களில் குண்டு வெடிப்பதற்கு பிஜேபியே காரணம் என்று அதிமேதாவித்தனமான அறிக்கை வெளியிட்ட தமிழக காங்.தலைவர் தங்கபாலு தற்போது எங்கே போனார்? வாய்மூடி மௌனியாக இருப்பதற்கு காரணம் என்ன?
டெல்லியில் நடைபெறுவது காங்கிரஸ் அரசு தானே! ஷீலா தீட்சித் என்ன பிஜேபி முதல்வரா? ஆகவே ஓட்டுக்காக ஏதாவது பேசவேண்டும் என்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
பயங்கரவாதத்தை ஒடுக்குவதை விட்டுவிட்டு, பயங்கரவாதிகளுக்கு வெண்சாமரம் வீசி, ராஜ உபசாரம் செய்து வரும் போக்கை மத்திய அரசும், மற்ற கட்சிகளும் மாற்றிக் கொள்ள வேண்டும்.
பயங்கரவாதிகளை உருவாக்கக் கூடிய மனநிலையை வளர்க்கும் மதரசாக்களை கண்காணித்து தடைசெய்ய வேண்டும்.
மீண்டும் பொடா வேண்டும்:
பொடா சட்டத்தை கடுமையாக்கி நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும். பயங்கரவாதிகளின் ஊது குழலாகச் செயல்படும் மனித உரிமை இயக்கங்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடப்பதற்கு முன்பே அதனைக் கண்டுபிடித்து தடுப்பதற்கும், ஒடுக்குவதற்கும் தனி புலனாய்வுத் துறையை உருவாக்க வேண்டும்.
பயங்கரவாதிகளிடமிருந்தும், குண்டுவெடிப்பு சம்பவங்களிலிருந்தும் தற்காத்துக் கொள்வதற்குத் தேவையான பயிற்சிகளை பள்ளி, கல்லூரி தொடங்கி பொதுமக்களுக்கும் கொடுக்க வேண்டும்.
இஸ்ரேல் உதவியை நாடுக:
பயங்கரவாதிகளையும், பயங்கரவாதத்தையும் ஒடுக்குவதற்குத் தேவையான ஆயுதங்கள், கருவிகள், பயிற்சிகளை இஸ்ரேலிடமிருந்து பெற்று ஈவு, இரக்கமின்றி ஒழித்துக் கட்ட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.