டெல்லி குண்டுவெடிப்பு: அமெரிக்க இந்திய முஸ்லீம்கள் கண்டனம்
நியூயார்க்: டெல்லி குண்டுவெடிப்புச் சம்பவத்திற்கு இந்திய முஸ்லீம் கவுன்சில் (அமெரிக்கா) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த பயங்கரவாத செயலை அதிகபட்ச கடுமையான வார்த்தைகளால் கண்டிப்பதாகவும், பலியானோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவிப்பதாகவும் இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமைப்பின் தலைவர் ரஷீத் அகமது கூறுகையில், அமெரிக்க இந்திய முஸ்லீம் கவுன்சில், டெல்லி குண்டுவெடிப்பை மிகக் கடுமையாக கண்டிக்கிறது. இது மிகவும் அநாகரீகமான, இழிவான செயல். கோழைத்தனமான வன்முறை. உயிரிழந்த அனைவரின் குடும்பங்களுக்கும், காயமடந்தோருக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்தியாவில் தேர்தல் வரக் கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் இதுபோன்ற தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருவது கவலை தருகிறது. இது மதவெறியர்களால் திட்டமிட்டு பரப்பப்படும் பயமுறுத்தும் செயலாகும்.
இந்த சம்பவங்கள் தொடர்பாக விரிவான, நேர்மையான விசாரணை நடத்தப்பட்டு உண்மை வெளிக் கொண்டு வரப்பட வேண்டும். தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
உண்மையான குற்றவாளிகளைப் பிடிப்பதில் போலீஸார் தீவிரம் காட்ட வேண்டும். மாறாக அப்பாவி முஸ்லீம் இளைஞர்கள் தண்டிக்கப்பட்டு விடக் கூடாது.
அகமதாபாத், பெங்களூர் குண்டுவெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து அப்பாவி முஸ்லீம் இளைஞர்களை போலீஸார் பலிகடாவாக்க முயற்சிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்திலும் அதுபோன்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்து விடக் கூடாது என்று அவர் கூறினார்.