தீவிரவாத தாக்குதல்கள் அதிகரிப்பு: இன்று அமைச்சரவை சிறப்பு கூட்டம்
நாடு முழுவதும் உள்ள பெருநகரங்களில் தொடர் குண்டுவெடிப்புகள் தொடர் கதையாகி விட்டன. இதனால் மத்திய அரசு கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது.
உள்துறை அமைச்சர் சுத்தமாக செயலிழந்து விட்டார். அவர் இப்பதவிக்கு லாயக்கற்றவர், இதுவரை இருந்த உள்துறை அமைச்சர்களிலேயே இவர்தான் மோசமானவர் என்று பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சிவராஜ் பாட்டீலை கடுமையாக விமர்சித்து வருகின்றன.
பிரதமர் பதவி விலக வேண்டும், தேர்தலுக்கு உத்தரவிட வேண்டும் என்று பாஜக கூறி வருகிறது.
மத்திய அரசிலும் சில மூத்த அமைச்சர்கள் சிவராஜ் பாட்டீலுக்கு எதிராக உள்ளனர். குறிப்பாக லாலு பிரசாத் யாதவ் எதிர்ப்பில் தீவிரமாக உள்ளார். பயங்கரவாத தாக்குதல்கள் குறித்து விவாதிக்க அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டுமாறு அவர் கோரிக்கை விடுத்திருந்தார். இதை ஏற்று இன்று அமைச்சரவையின் சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் பொடாவைப் போன்ற ஒரு கடுமையான சட்டம் கொண்டு வருவது குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்படவுள்ளதாக தெரிகிறது.