திருச்சி சிறையில் கைதி எஸ்கேப்: 2 போலீசார் சஸ்பெண்ட்
திருச்சி: திருச்சியில் கைதி ஒருவர் ஜன்னல் வழியே தப்பியோடினார். இது தொடர்பாக பணியில் இருந்த இரண்டு போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனையை சேர்ந்தவர் செல்வராஜ் (45). விழுப்புரம் மாவட்டம், வடபொன்பரப்பியில் நடந்த கூட்டுக் கொள்ளை வழக்கில் 2002ம் ஆண்டு கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
வழக்கு விசாரணைக்காக திருச்சியில் இருந்து சங்கராபுரம் நீதி மன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரை பாலகரை போலீசார் தாவூத்கான், காந்தி ஆகியோர் பஸ்சில் அழைத்துச் சென்றனர். நீதிமன்றத்தில் ஆஜர் செய்து விட்டு பின்னர் மீண்டும் திருச்சி நோக்கி பஸ்ஸில் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது கொணலை என்ற பஸ் இடத்தில் நின்ற போது செல்வம் போலீசார் பிடியில் இருந்து தப்பி ஜன்னல் வழியாக மின்னல் வேகத்தில் தப்பி ஓடி விட்டார்.
இது குறித்து சிறுகனூர் காவல் நிலையத்தில் போலீஸார் புகார் செய்தனர். வழக்கு பதிவு செய்து தப்பியோடிய கைதியை தேடி வருகின்றனர்.
விசாரணையில் கைதி செல்வராஜூக்கு கைவிலங்கு போடப்படவில்லை என்றும், போலீசார் பணியில் கவனக்குறைவாக இருந்ததால் தான் கைதி தப்பியிருக்க கூடும் என தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் தாவூத்கான், காந்தி ஆகியோரை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலெக்சாண்டர் மோகன் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications