அதிமுக, சிபிஐ, சிபிஎம், மதிமுக கூட்டாக உண்ணாவிரதம்
சென்னை: இலங்கைத் தமிழர்கள் மீதான ராணுவத் தாக்குதலை நிறுத்த வேண்டும், இலங்கைக்கு இந்தியா ராணுவ உதவிகளைச் செய்யக் கூடாது, கச்சத்தீவை மீட்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அக்டோபர் 2ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. இதில் அதிமுக, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவையும் பங்கேற்கவுள்ளன. புதிய கூட்டணியின் உதயமாக இது கருதப்படுகிறது.
இது குறித்து சிபிஐ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதலை நிறுத்துமாறு இந்திய அரசு, அந்நாட்டு அரசை வற்புறுத்த வேண்டும்; இலங்கை அரசுக்கு ராணுவ உதவிகளை இந்தியா நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அக்டோபர் 2ந் தேதி தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது.
இந்தப் போராட்டத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் பங்கேற்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கடிதம் எழுதியிருந்தார்.
இந்த அழைப்பை ஏற்று, உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது. இந்தப் போராட்டத்தில் அதிமுகவினரும் பங்கேற்பார்கள் என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
அதிமுக சார்பில் முத்துச்சாமி:
சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரே நடைபெறவுள்ள உண்ணா விரதப்போராட்டத்தில் அதிமுக அமைப்புச் செயலாளர் எஸ்.முத்துசாமி பங்கேற்க உள்ளார்.
வைகோவும் வருகிறார்...
உண்ணாவிரதப்போராட்டத்துக்கு மதிமுகவும் ஆதரவு தெரிவித்துள்ளது. அதோடு சேப்பாக்கத்தில் நடை பெறும் உண்ணாவிரதப் போராட் டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ பங்கேற்று வாழ்த்துரை வழங்குகிறார்.
மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் உள்ளிட்ட நிர்வாகிகளும் இந்த உண்ணா விரதத்தில் பங்கேற்கின்றனர். மாநிலம் முழுவதும் மார்க்சிஸ்ட் கட்சியினர் உண்ணாவிரதத்தில் பங்கேற்க உள்ளனர்.
தமிழர் வாழ்வுரிமை இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், பல்வேறு தமிழர் இயக்கங்கள் போராட்டத்துக்கு ஏற்கனவே ஆதரவு தெரிவித்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசியலில் புதிய அணிகளின் உதயம் தவிர்க்க முடியாதது என்ற நிலை ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், கம்யூனிஸ்ட் கட்சியின் உண்ணாவிரதப் போராட்டத்தில் அதிமுக, மதிமுக பங்கேற்கவுள்ளது புதிய கூட்டணிக்கான அஸ்திவாரமாக கருதப்படுகிறது.