ஜன. முதல் திருச்செந்தூர் - சென்னை செந்தூர் எக்ஸ்பிரஸ் தொடக்கம்
திருச்செந்தூர்: திருச்செந்தூர்- சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் ஜனவரி மாதத்திலிருந்து இயக்கப்படும் என்று ரயில்வே இணை அமைச்சர் வேலு தெரிவித்தார்.
நெல்லை - திருச்செந்தூர் இடையிலான அகலப் பாதையில் நேற்று ரயில் சேவையை அமைச்சர் வேலு கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாநில அமைச்சர் டி.பி.எம். மைதீன் கான், மத்திய அமைச்சர் ராதிகா செல்வி, தெற்கு ரயில்வே பொது மேலாளர் ராகேஷ் சோப்ரா, தனுஷ்கோடி ஆதித்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் வேலு பேசுகையில், நெல்லை-திருச்செந்தூர் இடையே உள்ள 10 ரயில் நிலையங்களில் முன்பதிவில்லாத டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். இந்த டிக்கெட்டுகளை மூன்று நாட்களுக்கு முன்னதாக பெறலாம்.
இந்த பாதையில் உள்ள ரயில் நிலையங்களில் ஒன்றில் முன்பதிவு வசதியும் உள்ளது. தெற்கு ரயில்வேயில் 162 ரயில் நிலையங்களில் முன்பதிவில்லாத டிக்கெட்டுகளை பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் 118 ரயில் நிலையங்களில் இந்த வசதியுள்ளது.
திருச்செந்தூரிலிருந்து இயக்கப்படும் எக்ஸ்பிரசை நெல்லை வரை அனைத்து ரயில் நிலையங்களிலும் நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துப்பட்ட கோரிக்கை பரிசீலிக்கப்படும்.
மயிலாடுதுறை பகுதியில் நடந்து வரும் இரட்டை பாதை பணிகளில் 4 பாலங்கள் உள்ளது. இந்த பாலங்களை அதிகாரிகள் ஆய்வு நடத்தி விரைவில் முடிக்க முயற்சி எடுத்து வருகின்றனர்.
எனவே இரட்டை பாதை பணி வரும் டிசம்பர் மாதத்திற்குள் முடியும். எனவே திருச்செந்தூர்- சென்னை இடையே செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் ஜனவரியில் இயக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications