அதிமுக 37வது ஆண்டு விழா: ஜெ. தலைமையில் ராசிபுரத்தில் விழா

அண்ணா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இம்மாதம் தேனியில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அடுத்து அதிமுகவின் 37வது ஆண்டு விழாவை நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் கோலாகலமாக கொண்டாடவுள்ளார் ஜெயலலிதா.
இதையொட்டி அடுத்த மாதம் 17ம் தேதி அவர் ராசிபுரம் செல்கிறார் ராசிபுரத்தில் மாவட்ட அதிமுக சார்பில் எம்ஜிஆரின் சிலை அமைக்கப்பட்டு கடந்த சில ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ளது. ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோதும், பின்னர் ஒரு முறையும் ராசிபுரத்திற்கு சென்று எம்ஜிஆர் சிலையை திறந்து வைப்பதாக அறிவிக்கப்பட்டது.
அதற்காக மாவட்ட அதிமுக சார்பில் ஜெயலலிதாவை வரவேற்க பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சுவரொட்டிகள், வரவேற்பு வளைவுகள் என்ற பலமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு தயார் நிலையில் இருந்தது. ஆனால் திடீரென அந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.
தற்போது அதிமுகவின் ஆண்டு விழாவையே அங்கு கொண்டாட ஜெயலலிதா முடிவு செய்துள்ளார். அந்த சமயத்தில் அவர், நீண்ட காலமாக திறக்கப்படாமல் இருக்கும் எம்ஜிஆர் சிலையை திறந்து வைக்கிறார்.
இது குறித்து அதிமுக சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை:
எம்ஜிஆர் அண்ணா திமுகவை தொடங்கி 36 ஆண்டுகள் நிறைவடைந்து வருகின்ற 17.10.2008 அன்று 37வது ஆண்டு தொடங்குகிறது. இதை முன்னிட்டு, கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா, நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்திற்கு சென்று அங்கு நிறுவப்பட்டுள்ள எம்ஜிஆர் சிலையை திறந்து வைக்கிறார். கட்சிக் கொடியை ஏற்றி வைத்து, அதிமுக துவக்க நாள் விழா சிறப்பு மலரை வெளியிடுகிறார்.
அதைத் தொடர்ந்து, ராசிபுரத்தில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications