உதவி என்ற பெயரில் இலங்கையில் காலூன்றும் பாக்.: தமிழ் எம்.பி.
சென்னை: இலங்கைக்கு உதவி செய்கிறோம் என்ற பெயரில் பாகிஸ்தான் படைகள் இலங்கையில் காலூன்றி வருகின்றன. இது தமிழர்களுக்கு மட்டுமல்ல, இந்தியாவின் பாதுகாப்புக்கும் உகந்ததல்ல என்று அந்நாட்டு தமிழ் எம்.பி. மனோ கணேசன் கூறியுள்ளார்.
சென்னை வந்த செய்தியாளர்களிடம் பேசுகையில், பாகிஸ்தானிலிருந்து தொடர்ந்து யுத்த கப்பல்கள் வந்து கொண்டுள்ளன. ஏராளமான ஆயுதங்களையும், படை வீரர்களையும் பாகிஸ்தான் அனுப்பி வைத்து வருகிறது.
மெல்ல மெல்ல இலங்கையை தனது தளமாக பாகிஸ்தான் மாற்றி வருகிறது. இது இலங்கைத் தமிழர்களுக்கு பேராபத்தாக முடியும். அது மட்டுமல்லாது, இந்தியாவின் பாதுகாப்புக்கும் இது உகந்ததல்ல.
இலங்கையில் நடக்கும் பிரச்சினையை, புலிகள் ஆதரவு, புலிகள் எதிர்ப்பு என்ற இரண்டு நிலையில் மட்டுமே இந்தியத் தலைவர்கள் பார்க்கிறார்கள். ஆனால் நிஜமான பிரச்சினை மனித உரிமை மீறல்தான். அதை இந்தியத் தலைவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்றார் அவர்.