டெல்லி: டிவி பெண் நிருபர் சுட்டுக் கொலை
காரில் சென்றபோது அவரை சுட்டுக் கொலை செய்துள்ளனர்.
25 வயதான செளம்யா வி்ஸ்வநாதன் கேரளத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவர் நேற்று அதிகாலை டெல்லி ஜண்டேவாலன் பகுதியில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்து வசந்த் குன்ஜ் பகுதியில் உள்ள தனது இல்லத்துக்கு மாருதி சென் காரில் சென்றார்.
3.30 மணியளவில் வசந்த் குன்ஜ் பகுதியில் நெல்சன் மண்டேலா சாலையில் மையத் தடுப்பின் மீது மோதிய நிலையில் அவரது கார் நின்றிருந்தது. தலையில் இருந்து ரத்தம் வடிந்த நிலையில் மயங்கிக் கிடந்தார் செளம்யா.
முன் பக்க டயர்கள் பஞ்சரான நிலையி்ல், ஹெட் லைட் எரிந்தவாறு நின்றிருந்த இந்த கார் குறித்து சிலர் போலீசாருக்கு தகவல் தந்தனர்.
முதலில் போலீசார் இது விபத்து என்றே கருதினர். ஆனால், பிரேதப் பரிசோதனை நடத்தியபோது அவரது தலையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்தே இது கொலை என்பது உறுதியானது.
காரை ஓட்டிச் சென்ற செளம்யாவை யாரோ சுட்டுள்ளனர். இதில் நிலை தடுமாறி அவர் சாலை தடுப்பில் மோதியிருக்கலாம் எனத் தெரிகிறது.
மேலும் அவரது காரின் பக்கவாட்டிலும் பெரும் கீறல்கள் உள்ளன. இதனால் இவரது காரை யாரோ இடித்து, தள்ளிச் சென்று பின்னர் சுட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. அவரது கார் டயரிலும் துப்பாக்கிக் குண்டு பாய்ந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
சம்பவம் நடப்பதற்கு 5 நிமிடங்களுக்கு முன் தனது வீட்டினருடன் செல்போனில் பேசியிருக்கிறார் செளம்யா.
இந்தக் கொலைக்கான காரணம் தெரியவில்லை. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.