சோனியா கூட்டத்தில் காங்கிரஸார் - விவசாயிகள் மோதல்
டெல்லி: டெல்லியில் சோனியா காந்தி கலந்து கொண்ட கூட்டத்தில் விவசாயிகளுக்கும், காங்கிரஸாருக்கும் இடையே பெரும் மோதல் ஏற்பட்டது. இருக்கைகளை தூக்கி இரு தரப்பினரும் வீசிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லியில் மாநகராட்சியால் அங்கீகரிக்கப்படாத குடியிருப்புகளை முறைப்படுத்தி, பட்டா வழங்கும் திட்டத்தை ஷீலா தீட்சித் தலைமையிலான காங்கிரஸ் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் நேற்று 11 குடியிருப்புகளில் வசிப்போருக்கான முறைப்படுத்தும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் சோனியா காந்தி கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கினார்.
சோனியா காந்தி பேச ஆரம்பித்தபோது டெல்லி புறநகரில் உள்ள கஞ்சவாலா கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் அங்கு திரண்டு, ஷீலா தீட்சித் அரசுக்கு எதிராக கோஷமிடத் தொடங்கினர்.
காங்கிரஸ் கட்சியையும், ஷீலா தீட்சித் அரசையும் எதிர்த்து அவர்கள் கோஷமிட்டதால் காங்கிரஸார் ஆத்திரமடைந்தனர். பதிலுக்கு காங்கிரஸ் வாழ்க, சோனியா வாழ்க என்று கோஷமிட்டனர். இதனால் அவர்களுக்கும், விவசாயிகளுக்கும் இடையே மோதல் மூண்டது.
இந்த அமளிக்கு மத்தியில், சோனியா காந்தி தொடர்ந்து பேசினார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் சாதனைகளை பட்டியலிட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது விவசாயிகள்- காங்கிரஸார் மோதல் முற்றியது. இருக்கைகளை தூக்கி இரு தரப்பினரும் வீசி ரகளையில் இறங்கினர். செருப்புகளும், கம்புகளும் சரமாரியாக வீசப்பட்டன.
இதனால் சோனியா காந்தியால் பேச்சைத் தொடர முடியவில்லை. இதையடுத்து அவர் தனது பேச்சை நிறுத்திக் கொண்டார். அந்த இடமே போர்க்களம் போல காணப்பட்டது. இந்த சம்பவத்தால் விழா நடந்த இடம் பெரும் பரபரப்பாகி காணப்பட்டது.












Click it and Unblock the Notifications