குண்டுவெடிப்பு: மாஜி அமைச்சருக்கு 20 ஆண்டு தண்டனை
சூரத்: குஜராத் மாநிலம் சூரத்தில் கடந்த 1993ம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்புச் சம்பவ வழக்கில் முன்னாள் அமைச்சருக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மும்பை குண்டுவெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத் மாநிலம் சூரத் நகரில் கடந்த 1993ம் ஆண்டு ஜனவரி 28ம் தேதி 2 குண்டுகள் வெடித்தன. இதில் ஒரு பெண் பலியானார். 38 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் முகம்மது சுர்தி உள்ளிட்ட 12 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த தடா நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. அதில் சுர்தி, ஹூசேன் கடயாலி, முன்னாள் காங்கிரஸ் கவுன்சிலர் இக்பால் வாடிவாலா உள்ளிட்ட 5 பேருக்கு தலா 20 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிபதி தஹோல்தியா உத்தரவிட்டார்.
சுர்தி, கடயாலி, இக்பால் ஆகியோருக்கு தலா ரூ. 2 லட்சமும், முஷ்டாக் படேல் என்பவருக்கு ரூ. 1 லட்சமும், யூசுப் தாது என்பவருக்கு ரூ. 50 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டது.
7 பேருக்கு தலா 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஒருவர் விடுதலை செய்யப்பட்டார்.