கம்யூனிஸ்டுகள் மோசமானவர்கள் என்று சொல்ல மாட்டேன்: கருணாநிதி
சென்னை: கம்யூனிஸ்டுகள் மோசமானவர்கள் என்று ஒருபோதும் சொல்ல மாட்டேன். கம்யூனிஸ்ட் தலைவர்கள் மாறலாம், ஆனால் கம்யூனிசம் மாறாது என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.
தன்னையும், தனது அரசையும் விமர்சித்துப் பேசியுள்ள கம்யூனிஸ்ட் தலைவர்கள் நல்லகண்ணு, தா.பாண்டியன் ஆகியோருக்குப் பதிலளித்து முரசொலியில் முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:
முக்கியப் பிரச்சனைகளில் எனது அரசு தூங்கிக் கொண்டிருப்பதாக கம்யூனிஸ்ட் தலைவர்கள் கூறுகின்றனர். ஆனால் அது போன்ற விஷயங்களில் எனது அரசு எப்படி விரைவாகவும், உணர்வுப் பூர்வமாகவும் செயல்பட்டுள்ளது என்பதை கூற விரும்புகிறேன்.
தற்போது மாற்று நோபல் பரிசைப் பெற்றுள்ள நாகை சர்வோதய தம்பதிகளான கிருஷ்ணம்மாளும் - சங்கரலிங்கம் ஜெகன்னாதனும், 1998ம் ஆண்டு தங்களது நிலங்களை ஏழைகளுக்கு நன்கொடையாக அளிக்க விரும்பினர். இதை கிரயப்பத்திரம் மூலம் வழங்க அவர்கள் விரும்பினர். இதற்காக வரி விலக்கு கோரினர். அவர்களின் கோரிக்கையை நாகை மாவட்ட ஆட்சித் தலைவர் அரசுக்கு பரிந்துரையாக அனுப்பி வைத்தார். அப்போது 2001ம் ஆண்டு, அதிமுக ஆட்சிக்கு வந்து விட்டது.
அதிமுக ஆட்சிக்காலத்தில், சட்டம் மற்றும் வணிக வரித்துறை இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டு, அரசு உத்தரவில் திருத்தம் செய்யலாம் என அப்போதைய முதல்வருக்குப் பரிந்துரைத்தது. முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு அது தொடர்பான கோப்பு 2003ம் ஆண்டு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் 2006ம் ஆண்டு அதிமுக வீட்டுக்கு அனுப்பப்படும் வரை அந்த கோப்பு திறந்து கூட பார்க்கப்படவில்லை. அரசு உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை.
2006ம் ஆண்டு மே மாதம் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் இரண்டு மாதங்களில் அந்தக் கோப்பு பார்க்கப்பட்டு கையெழுத்திடப்பட்டது. திமுக அரசு இவ்வளவு விரைவாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் அரசு தூங்காமல் செயல்பட வேண்டும் என்று கூறுகிறார் நல்லகண்ணு.
கருணாநிதி ஆட்சிக்காலத்தில் கம்யூனிஸ்ட் தலைவர்கள் சிறைக்கு செல்ல வேண்டியிருந்தது என்று மூத்த சிபிஐ தலைவர் ஏ.எம்.கோபு கூறியுள்ளார். நான் மதிக்கும் கோபு போன்ற தலைவர்களை சிறைக்கு அனுப்ப வேண்டும் என நான் ஒருபோதும் எண்ணியதில்லை.
தேசிய தலைவர்களை கெளரவிக்கும் விஷயத்தில், என்னை முன்னாள் முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியுடன் ஒப்பிட முடியாது என்று கூறியுள்ளார் தா.பாண்டியன். மறைந்த தலைவருடன் ஒருபோதும் என்னை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள நான் எண்ணியதே இல்லை.
ஆனால் ஜீவானந்தம், விஸ்வநாத தாஸ், பாஷ்யம் என்கிற ஆர்யா, செண்பகராமன், காமராஜர், ராஜாஜி, பக்தவச்சலம், வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள், பூலித்தேவன், தில்லையாடி வள்ளியம்மை ஆகியோர் எனது ஆட்சிக்காலத்தில் கெளரவிக்கப்பட்ட தேசியத் தலைவர்கள் என்பதை பாண்டியனுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்.
முதல்வருக்கு தலையாட்டிக் கொண்டிருக்கும் கம்யூனிஸ்ட் தலைவர்களை மட்டுமே அவருக்குப் பிடிக்கும் என்றும் தா.பாண்டியன் கூறியுள்ளார். தலையாட்டுகிறார்களோ, இல்லையோ, கம்யூனிஸ்ட் தலைவர்களை நான் மிகுந்த மரியாதைக்குரிய இடத்தில் வைத்திருக்கிறேன்.
கம்யூனிஸ்டுகள் மோசமானவர்கள் என்று ஒருபோதும் சொல்ல மாட்டேன். கம்யூனிஸ்ட் தலைவர்கள் மாறலாம், ஆனால் கம்யூனிசம் மாறாது. இதை நான் அறிவேன்.
2006ம் ஆண்டு மே மாதம் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் இந்த இரண்டரை ஆண்டுகாலத்தில் 6 லட்சத்து 4,700 பட்டாக்களை இந்த அரசு வழங்கியுள்ளது.
இதை மேற்கு வங்கம், கேரளா போன்ற இடதுசாரிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களுடன் தா.பாண்டியன் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார் கருணாநிதி.