பிரதீபா பாட்டீலுக்கு இ-மெயில் மூலம் கொலை மிரட்டல்!
புனே: மகாராஷ்டிர மாநிலம் புனேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள குடியரசு தலைவர் பிரதீபா பாட்டீலை கொலை செய்யப்போவதாக இ-மெயில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மிரட்டலை தொடர்ந்து பிரதீபா பாட்டீலுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
குடியரசு தலைவர் பிரதீபா பாட்டீல் 4 நாள் பயணமாக மகாராஷ்டிர மாநிலம் புனேவுக்கு நேற்று முன் தினம் சென்றார். இன்று மாலை இளையோர் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைக்கிறார்.
இந்த நிலையில் பிரதீபா பாட்டீலை கொலை செய்யப் போவதாக இ-மெயில் மூலம் மாநில அரசுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த இ-மெயில் மிரட்டலில் மாறுவேடத்தில் வந்து பிரதீபா பாட்டீலை தாக்கப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த மிரட்டலை தொடர்ந்து பிரதீபா பாட்டீலுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.