இலங்கை: மத்திய அரசு ஏன் தலையிட முடியாது?-கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
சென்னை: இன்னொரு நாட்டின் பிரச்சனையில் நாம் தலையிட முடியாது என்றால் வங்காளதேசம் எப்படி உருவானது என முதல்வர் கருணாநிதி கேள்வி எழுப்பினார்.

சென்னையில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி

கேள்வி: எம்பிக்கள் ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டார்கள். இதை மத்திய அரசு எப்படி எடுத்துக் கொள்ளும் என்று நினைக்கிறீர்கள்?

கருணாநிதி: நாங்கள் எதிர்பார்த்ததைத்தான் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றினோம். அந்தத் தீர்மானத்தைத்தான் நிறைவேற்ற வேண்டுமென்று எதிர்பார்க்கிறோம்.

கேள்வி: வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர மேனன், டெல்லியில் உள்ள இலங்கை தூதரக அதிகாரியை அழைத்து தனது கவலையை தெரிவித்திருக்கிறாரே? பிரதமரும் தனது கவலையை சொல்லி இருக்கிறாரே?

கருணாநிதி: அது சரியானதுதான்.

கேள்வி: போர் நிறுத்தம் இப்போது சாத்தியமில்லை என்று ராஜபக்சே சொல்லியிருக்கிறாரே?

கருணாநிதி: போர் நிறுத்தம் செய்ய முடியாது என்று அவர் சொன்னதாக காலை பத்திரிகையில் வந்திருக்கிறது. ஆனால் மாலைப் பத்திரிகையில் அவர் அப்படி சொல்லவில்லை என்று செய்திகள் வந்திருக்கின்றன.

கேள்வி: ஏற்கனவே மத்திய அரசுக்கு 2 வார கெடு கொடுத்திருக்கிறீர்களே. அதற்குள் ஏன் திமுக எம்.பி.க்கள் ராஜினாமா கடிதம் கொடுத்தனர்?

மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு (குறுக்கிட்டு): நாங்கள்தான் தானாக முன்வந்து கொடுத்தோம். முதல்வர் கடிதம் கொடுங்கள் என்று கேட்கவில்லை.

கேள்வி: நாடாளுமன்றத்தில் ஏதாவது ஒரு பிரச்சினை வந்தால், அதில் திமுக எம்.பிக்களின் ஓட்டும் அவர்களது எண்ணிக்கையும் தேவைப்பட்டால் திமுக எம்பிக்கள் என்ன நிலை எடுப்பார்கள்?

கருணாநிதி: அங்கு கடிதம் தரப்படவில்லை. அவர்கள் கொடுத்துள்ள கடிதம் என்னிடம்தான் உள்ளது.

கேள்வி: மத்திய அரசு என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?

கருணாநிதி: இலங்கையில் அமைதி ஏற்படுவதற்கு எத்தகைய வழிமுறைகளை கையாள வேண்டும் என்பது மத்திய அரசுக்கு தெளிவாக தெரியும். இலங்கையில் எந்த முறையை கையாள்வது என்பதை அவர்களே முடிவெடுத்து செயல்பட்டு இலங்கையில் படுகொலைக்கு இதுவரை ஆளாகாத தமிழர்களை பாதுகாப்பார்கள் என்று நம்புகிறேன்.

கேள்வி: ஒரு நாட்டின் உள்நாட்டு பிரச்சினையில் அண்டை நாடுகள் தலையிடுவது சரியா? நம் நாட்டு பிரச்சினையில் இன்னொரு நாடு நுழைவதை நாம் விரும்புவோமா?

கருணாநிதி: அப்படியானால், வங்காளதேசம் எப்படி உருவானது?

கேள்வி: இந்திய ராணுவம் அங்கே செல்ல வேண்டும் என்று நினைக்கிறீர்களா?

கருணாநிதி: ராணுவத்துக்கு ராணுவம், போருக்கு போர், துப்பாக்கிக்கு துப்பாக்கி, டாங்கிப் படைக்கு டாங்கிப் படை என்று தீர்வு காண வேண்டும் என்று சொல்லவில்லை. அங்கு எழுந்துள்ள பிரச்சினைக்கு அமைதியின் மூலமாகவும் தீர்வு காண முடியும்.

கேள்வி: நீங்கள் விடுதலைப் புலிகளுக்கு உதவுவதற்காகத்தான் இதுபோன்ற தீர்மானம் போடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறதே?

கருணாநிதி: எங்களுடைய பிரச்சனை நீங்கள் நினைப்பது போல விடுதலைப் புலிகளை காப்பாற்றுவதோ, விடுதலைப் புலிகளுக்கு உதவுவதோ அல்ல. அனாதையாக அங்கே செத்துக் கொண்டிருக்கும் தமிழர்களை காப்பாற்றுவதுதான்.

கேள்வி: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ளாத கட்சிகளுக்கு மனித சங்கிலி போராட்டத்துக்கு அழைப்பு விடுப்பீர்களா?

கருணாநிதி: அனைத்துக் கட்சி கூட்டத்தையே கபட நாடகம் என்று அறிக்கை விடுத்திருக்கிறார்கள். விடுதலைப்புலிகளுக்காக போராட்டம் நடத்துகிறோம் என்றும் மேடையிலே பேசியிருக்கிறார்கள். அப்பேர்பட்டவர்களுக்கு மனித சங்கிலிக்கான அழைப்பு எப்படி அனுப்ப முடியும்? அவர்கள் சங்கிலிக்குள் வரமாட்டார்கள்.

கேள்வி: தற்போது நடக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தில் திமுக எம்பிக்கள் கலந்து கொள்வார்களா?

கருணாநிதி: ஒரு குறிப்பிட்ட காலக்கெடு (28ம் தேதி) கொடுத்திருக்கிறோம். அதுவரைக்கும் கலந்து கொள்வார்கள்.

கேள்வி: இந்த பிரச்சினையால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கவிழும் வாய்ப்பு உள்ளதா?

கருணாநிதி: அப்படிப்பட்ட ஒரு நோக்கத்தோடு நாங்கள் செயல்படவில்லை. அந்த நோக்கத்தோடு தீர்மானமும் நிறைவேற்றவில்லை.

கேள்வி: அக்டோபர் 28ம் தேதியில் காலக்கெடு முடிவதற்குள் ஒரு தீர்வு வரும் என்று எதிர்பார்க்கிறீர்களா?

கருணாநிதி: தீர்வு வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். நல்ல முடிவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

கேள்வி: வரவில்லை என்றால் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்?

கருணாநிதி: நாங்கள் எந்த நடவடிக்கையையும் அடுத்தடுத்து என்ன என்பதை முதலிலேயே சொல்வதில்லை. அவ்வப்போது திமுக உயர்மட்டக் குழு, அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் கூட்டித்தான் முடிவு செய்வோம்.

கேள்வி: காங்கிரஸ் உங்களுடைய கூட்டணியில் இருக்கிறார்கள். கே.வி.தங்கபாலு, நான் வேண்டும் என்றால் ராஜினாமா செய்யலாம். மற்ற காங்கிரஸ் எம்பிக்கள் ராஜினாமா குறித்து சோனியா காந்திதான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறாரே?

கருணாநிதி: அவருடைய நிலைமையை அவர் சொல்லியிருக்கிறார். அதைப்பற்றி நான் விமர்சிக்க விரும்பவில்லை.

கேள்வி: 28ம் தேதிக்குள் டெல்லி சென்று பிரதமரை சந்திப்பீர்களா?

கருணாநிதி: எனக்குத் தெரியாது.

கேள்வி: இதனால் காங்கிரசுடனான கூட்டணிக்கு ஏதும் பாதிப்பு வருமா?

கருணாநிதி: பாதிப்பு யாருக்கு வரும், யாருக்கு வராது என்பது பற்றி நாங்கள் சிந்திக்கவில்லை. இலங்கையில் உள்ள தமிழனுக்கு வந்த பாதிப்பை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதுதான் எங்கள் சிந்தனை என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+