மழை-மனித சங்கிலி: நெரிசலில் ஸ்தம்பித்த சென்னை
சென்னை: சென்னையில் நேற்று பெய்த பலத்த மழை மற்றும் மனித சங்கிலி போராட்டம் காரணமாக ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகனங்கள் ஸ்தம்பித்துப் போயின. நள்ளிரவுக்கு மேல்தான் நிலைமை படிப்படியாக சரியானது.
சென்னையில் நேற்று மாலை திடீரென பலத்த மழை பெய்தது. காற்றும் இல்லாததால் மழை மிகக் கடுமையாக இருந்தது. இதனால் அண்ணா சாலை, காமராஜர் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஜி.எஸ்.டி. சாலை உள்ளிட்ட அனைத்து முக்கிய சாலைகளிலும் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும், நேற்று திமுக தலைமையில் நடந்த மனித சங்கிலிப் போராட்டத்திற்காக பல்லாயிரக்கணக்கானோர் திரண்டதால் போக்குவரத்து நெரிசல் இடியாப்பச் சிக்கலாகிப் போனது.
அனைத்து முக்கிய சாலைகளிலும் வாகனங்கள் வேகமாக செல்ல முடியாமல் ஊர்ந்து சென்றன. நேரம் ஆக ஆக இதுவும் குறைந்து வாகனங்கள் எங்கும் நகர முடியாமல் ஸ்தம்பித்து நின்றன.
நடந்து செல்ல முடியாதஅளவுக்கு சாலையோரங்களில் தண்ணீர் தேங்கிக் கிடந்ததால் நடக்கவும் முடியாமல் மக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.
தீபாவளிக்காக ரயில்கள், பஸ்களைப் பிடிக்க கிளம்பியோர் உரிய நேரத்தில் செல்ல முடியாமல் அவற்றை தவற விட்டனர். நூற்றுக்கணக்கானோர் கோயம்பேடு பஸ் நிலையத்தை மிக தாமதமாக வந்தடைந்து பஸ்களைத் தவற விட்டு இரவு முழுவதும் பஸ் நிலையத்திலேயே தஞ்சமடைய நேரிட்டது.
கிண்டி முதல் பல்லாவரம் வரை மழை நீர் வெள்ளமென தேங்கி நின்றதால் வெளியூர் பஸ்கள் போக முடியாமல் ஸ்தம்பித்து நின்றன.
சென்னை நகரையே ஸ்தம்பிக்க வைத்த இந்த போக்குவரத்து நெரிசல் நள்ளிரவு வரை நீடித்தது. அதன் பிறகுதான் படிப்படியாக போக்குவரத்து சகஜ நிலைக்கு திரும்பத் தொடங்கியது.












Click it and Unblock the Notifications