நேபாள முன்னாள் மன்னர் வீடுகளுக்கு மின்சாரம் துண்டிப்பு
காத்மாண்டு: நேபாள முன்னாள் மன்னர் ஞானேந்திரா மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளுக்கான மின்சார விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது. கரன்ட் பில் கட்டாததால் இந்த நடவடிக்கையை நேபாள அரசு எடுத்துள்ளது.
ஞானேந்திராவும் அவரது உறவினர்களும் மின்சாரவாரியத்துக்கு செலுத்த வேண்டிய ரூ.7 கோடியே 70லட்சம் பாக்கி உள்ளது. இதை அடுத்த 15 நாட்களுக்குள் செலுத்தவேண்டும். செலுத்தாவிட்டால் மின்சப்ளை துண்டிக்கப்படும் என்றும் மின்சார வாரியம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
மன்னரின் அதிகாரங்களை நாடாளுமன்றம் கடந்த மே மாதம் பறித்தது. அன்று முதல் மன்னரும், அவரது உறவினர்களும் மின்சார வாரியத்துக்கு மின்சார கட்டணம் செலுத்தவில்லை. இதற்காக ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
மின்சாரவாரியத்துக்கு கட்டணம் செலுத்தும்படி மன்னருக்கும், அவரது உறவினர்களுக்கும் தொடர்ந்து வேண்டுகோள் விடப்பட்டது. ஆனால் அதை அவர்கள் கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து மின் விநியோகத்தை துண்டிக்க மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மின்சார கட்டண பாக்கியைக் கட்டாவிட்டால் மின்சப்ளையை துண்டிப்பது என்ற முடிவு கடந்த 17-ந்தேதி எடுக்கப்பட்டது.
ராணுவ தளபதிய பதவிக்கு முன்னாள் நக்சலைட்?
இதற்கிடையே, முன்னாள் மாவோயிஸ்ட் நக்சலைட் கமாண்டர் பசங்க் என்பவரை, ராணுவ தலைமைத் தளபதியாக நியமிக்க மாவோயிஸ்ட் கட்சி முயல்வதாக நேபாள காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
பசங்க் உள்ளிட்ட ராணுவத்தில் இடம் பெறாத யாரையும் சீனாவுக்கு ராணுவப் பயிற்சிக்காக அனுப்பக் கூடாது என நேபாள காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நேபாள அரசை வலியுறுத்தியுள்ளன.
இதுகுறித்து நேபாள நாடாளுமன்றத்தின் காங்கிரஸ் கொறடா ஷோபாகர் பரஜாலி கூறுகையில், பசங்க்கை ராணுவ தலைமைத் தளபதியாக நியமிக்க முயற்சிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
இதுதொடர்பாக மாவோயிஸ்ட் கட்சியினர் சதி செய்து வருகின்றனர். பசங்க்கை எப்படியாவது தளபதியாக்கி விட அவர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிகிறது என்றார் அவர்..
சீனாவில் ராணுவப் பயிற்சி பெற மாவோயிஸ்ட் அரசு நான்கு பேரை தேர்வு செய்துள்ளது. அதில் ஒருவர்தான் பசங்க். 9 மாத கால பயிற்சி இது. இந்தப் பயிற்சி முடித்தவர்கள்தான் ராணுவத் தளபதி பதவிக்கு தகுதி பெற முடியும் என்பதால் பசங்க் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.