2,67,000 கிமீ உயரத்தை எட்டியது சந்த்ராயன்

பூமியிலிருந்து 1,65,000 கி.மீ. உயரத்தில் நீள் வட்டப் பாதையில் சுற்றிக் கொண்டிருந்த சந்த்ராயன் இன்று 2,67,000 கி.மீ. உயரத்தை அடைந்தது. அதிலுள்ள மேட்டார்களை இன்று 3 நிமிடம் 12 நொடி இயக்கி அதன் உயரம் அதிகரிக்கப்பட்டது.
இப்போது நீள்வட்டப் பாதையில் சுற்றும் சந்த்ராயனுக்கும் பூமிக்கும் இடையிலான அதிகபட்ச தூரம் 2,67,000 கி.மீ ஆகும். குறைந்தபட்ச தூரம் 465 கி.மீ. ஆக உள்ளது.
இந்த உயரத்தில் அது பூமியை ஒரு முறை சுற்றி வர 6 நாட்கள், 15 நிமிடங்கள் ஆகும்.
இது குறித்து சந்த்ராயன் திட்ட இயக்குனரான அண்ணாதுரை கூறுகையில், வரும் நவம்பர் 3ம் தேதி தான் மிக முக்கியமான நாள். அன்று தான் கடைசியாக சந்த்ராயனின் தூரம் அதிகரிக்கப்பட்டு நிலவை அது நெருங்கும். அன்றைய தினம் சந்த்ராயன் 384,000 கி.மீ. தூரத்தை எட்டும்.
நவம்பர் 8ம் தேதி இந்த விண்கலம் நிலவின் வட்டப் பாதைக்குள் நுழைந்துவிடும். இதையடுத்து அதை நிலவில் இருந்து 100 கி.மீ. உயரத்தில் பறக்கச் செய்வோம். இது நவம்பர் 14 அல்லது 15ம் தேதி நடக்கலாம்.
இதற்குத் தேவையான அளவு எரிபொருள் விண்கலத்தில் உள்ளது. அதில் மொத்தமுள்ள 819 கிலோ எரிபொருளில் இதுவரை 340 கிலோ தான் செலவிடப்பட்டுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications