யுஎஸ்: மனைவி-2 குழந்தைகளை கொன்ற வேலையிழந்த இந்தியர்
சமீபத்தில் தான் அமெரிக்க நிதி நெருக்கடியால் வேலையிழந்த கலிபோர்னியாவைச் சேர்ந்த கார்த்திக் ராஜாராம் என்ற இந்தியர் தனது மனைவி, மாமியார், 3 குழந்தைகளை சுட்டுக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.
இந் நிலையில் மி்ச்சிகன் மாகாணத்தில் உள்ள நோவி நகரில் வேலையிழந்த தந்தை குழந்தைகளையும் மனைவியையும் கொலை செய்துள்ளார்.
ஆந்திராவைச் சேர்ந்தவரான லட்சுமிநிவாஸராவ் நெருசு (42) தனது மனைவி ஜெயலட்சுமி (37), மகள் தேஜஸ்வி (14), மகன் சிவா (12) ஆகியோரைக் கொலை செய்துவிட்டு தப்பிவிட்டார்.
திங்கள்கிழமை இவர்களது உடல்கள் வீட்டில் கண்டெடுக்கப்பட்டன.
பல நாட்களாக இந்தக் குடும்பத்தினர் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை என நெருசுவின் சகோதரர் போலீசாருக்கு தகவல் தந்தையடுத்து அவர்களது வீட்டை போலீசார் சோதனையிட்டனர். அப்போது தாயும் குழந்தைகளும் தலையிலும் கழுத்திலும் கத்தியால் குத்தப்பட்டு மிகக் கொடூரமான முறையில் கொலையாகிக் கிடந்தனர்.
தந்தையான லட்சுமிநிவாஸராவ் நெருசுவைக் காணவில்லை. அவர் தான் இந்தக் கொலைகளை செய்திருக்க வேண்டும் என போலீசார் கருதுகின்றனர்.
ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வந்த லட்சுமிநிவாஸராவ் சமீபத்தில் தான் வேலையிழந்தார். சமீபத்தில் அவரது காரை கடன் கொடுத்த நிதி நிறுவனம் கைப்பற்றிச் சென்றது.
இதற்கிடையே லட்சுமிநிவாஸராவ் கடந்த 14ம் தேதி இந்தியாவுக்கு சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. கொலைகளை செய்துவிட்டு அவர் தப்பி வந்திருக்கலாம் என்று தெரிகிறது.
முன்பு டெக்ஸாசிலும் இலினாய்சிலும் வசித்து வந்த இந்தக் குடும்பம் சமீபத்தில் தான் டெட்ராய்ட் அருகே மிச்சிகனி்ல் அடு்க்கு மாடிக் குடியிருப்பில் குடியேறினர்.