9 உலகத் தலைவர்களுடன் ஓபாமா ஆலோசனை
சிகாகோ: அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பாரக் ஓபாமா, தனது வெற்றிக்குப் பின்னர் 9 உலகத் தலைவர்களுடன் தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்தியுள்ளார்.
பொருளாதார நெருக்கடி, தட்பவெப்ப மாற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து இந்தத் தலைவர்களுடன் ஓபாமா ஆலோசனை நடத்தியுள்ளார்.
இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுன், ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட், பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோஸி, ஜெர்மன் அதிபர் ஏஞ்செலா மார்க்கல், இஸ்ரேல் பிரதமர் எஹூத் ஓல்மர்ட், ஜப்பான் பிரதமர் டாரோ அசோ, மெக்ஸிகோ அதிபர் பெலிப்பி கால்டிரன், தென் கொரிய அதிபர் லீ மியூங் பாக், கனடா பிரதமர் ஸ்டீவன் ஹார்பர் ஆகியோருடன் நேற்று ஓபாமா ஆலோசனை நடத்தினார்.
அப்படியே, தனது வெற்றிக்கு வாழ்த்துச் சொன்னதற்காக நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.
ஓபாமாவுடன் பிரவுன் 10 நிமிடங்கள் பேசினார். உலகப் பொருளாதாரம், ஈராக், ஆப்கானிஸ்தான் விவகாரம், மத்திய கிழக்கு அமைதிப் பேச்சுவார்த்தை குறித்து அப்போது இருவரும் விவாதித்துள்ளனர்.
ஓபாமாவின் செய்தித் தொடர்பாளர் இத்தகவலை வெளியிட்டு்ளார்.
பொருளாதார நெருக்கடிக்கு விரைவில் தீர்வு - ஓபாமா
இதற்கிடையே, அமெரிக்காவை அச்சுறுத்திக் கொண்டுள்ள வரலாறு காணாத பொருளாதார சவாலை விரைவில் சமாளித்து வெற்றி காண்போம் என ஓபாமா தெரிவித்துள்ளார்.
அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் முதல் முறையாக செய்தியாளர்களிடம் இன்று பேசினார் ஓபாமா. அப்போது அவர் கூறுகையில், பொருளாதார நெருக்கடியை தீர்க்க விரைந்து செயல்படவுள்ளேன். புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், வரி சலுகைகளை அளிக்கவும் திட்டமிட்டுள்ளேன்.
நமது வாழ்க்கையில் இப்படி ஒரு பொருளாதார சவாலை அமெரிக்கா சந்தித்ததில்லை. இதிலிருந்து நாம் மீள வேண்டும். அதுவும் விரைவாக மீள வேண்டும்.
அதிபர் பதவியேற்றதும் முதலில் நான் இந்த சவாலைத்தான் சந்திக்கப் போகிறேன். இதை சமாளிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன். பொருளாதார சிக்கலால் தவித்துக் கொண்டிருக்கும் அமெரிக்க குடும்பங்களுக்கு விரைவில் நிவாரணம் அளிப்பேன்.
தற்போது இந்தப் பிரச்சினைக்கு சில தீர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் இது போதாது, மேலும் சில தீர்வுகளை நாம் செய்தாக வேண்டும்.
எனது குழுவினர் இதுதொடர்பாக அடுத்த சில மாதங்களுக்கு தீவிர கண்காணிப்பை மேற்கொள்ளவுள்ளனர் என்றார் ஓபாமா.












Click it and Unblock the Notifications