100 கோடி இந்தியர்களின் தன்மானத்திற்கு சவால் விடும் ராஜபக்சே: வைகோ
சென்னை: போர் நிறுத்தம் செய்ய மாட்டோம், விடுதலைப் புலிகளை அழிக்காமல் விட மாட்டோம் என இலங்கை அதிபர் ராஜபக்சே, டெல்லியில் நின்று கொண்டு கூறியதன் மூலம், 7 கோடி தமிழர்களுக்கு மட்டுமல்ல, 100 கோடி இந்தியர்களின் தன்மானத்திற்கும், சுயமரியாதைக்கும் விடப்பட்ட சவால் என்று மதிமுக பொதுச் செயலாளர்
வைகோ தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:
சுதந்திர இந்தியாவின் வரலாற்றிலேயே இந்திய அரசுக்கு ஏற்படாத அவமானம் இப்போது நேர்ந்து விட்டது. இலங்கைத் தீவில், ஈழத்தமிழ் இனத்தைக் கருவறுக்க, கொடிய ராணுவத் தாக்குதலை நடத்திவரும் சிங்கள அரச தலைவர் ராஜபக்சே, இந்தியத் தலைநகரில் நடந்துகொண்ட விதமும், ஆணவத்தோடும், திமிரோடும் இலங்கையில் போர்நிறுத்தம் செய்யமாட்டோம்; ராணுவத் தாக்குதலைத் தீவிரப்படுத்துவோம்; விடுதலைப் புலிகளை முற்றாக அழிக்கும் வரை, போரை நிறுத்தப் போவதே இல்லை என்று, கொக்கரித்து விட்டுச் சென்றுள்ளார்
அதுவும் எந்த நேரத்தில்? எந்தச் சூழ்நிலையில்?
இலங்கையில் போர்நிறுத்தம் செய்வதற்கு விடுதலைப் புலிகள் முன்வந்து உள்ள நிலையில் சிறிலங்கா அரசும் போர்நிறுத்தம் செய்வதற்கு இந்திய அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற தீர்மானம் தமிழகச் சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட 48 மணி நேரத்துக்கு உள்ளாக, சிறிலங்கா அரச தலைவர் இவ்வளவு மமதையோடு பேசியது, தமிழ்நாட்டின் ஏழு கோடி மக்களுக்கு மட்டும் அல்ல, நூறு கோடி இந்தியர்களின் தன்மானத்துக்கு, சுயமரியாதைக்கு விடப்பட்டு உள்ள சவால் ஆகும்.
இவ்வளவு துணிச்சலாக ராஜபக்ச பேசியதற்கு, இந்தியாவின் மன்மோகன்சிங் அரசுதான் காரணம் ஆகும். கடந்த நான்கு ஆண்டுக் காலமாகவே சிறிலங்கா அரசுக்கு எல்லாவிதத்திலும் இராணுவ உதவிகள் அளித்தும், ஆயுதங்கள், ராடார்களை வழங்கியும் 2 ஆயிரம் கோடி ரூபாய் வரை வட்டி இல்லாக் கடன் கொடுத்தும், சிறிலங்கா விமான ஓட்டிகள், இராணுவ வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி கொடுத்தும், இந்திய - சிறிலங்கா கடற்படை தகவல் பரிமாற்ற ஒப்பந்தம் செய்வதும், இந்திய இறையாண்மைக்கே இழுக்கு ஏற்படுத்தும் வகையில், இந்தியக் கடல் எல்லையில் சிறிலங்கா கடற்படை கண்ணிவெடிகளைப் போட அனுமதித்ததும், ஐக்கிய நாடுகள் சபையில், இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல்களைக் கண்டித்து, சுவிட்சர்லாந்தும், நியூசிலாந்தும் கொண்டு வந்த தீர்மானத்தை சிறிலங்கா அரசோடு சேர்ந்து கொண்டு எதிர்த்துக் குரல் கொடுத்ததும்,
கடந்த நான்கு ஆண்டு காலத்தில் தொடர்ந்து இந்திய இராணுவத் தளபதிகளை கொழும்புக்கு அனுப்பி, சிறிலங்கா அரசின் இராணுவத்துக்கு ஆலோசனைகளை வழங்கியும், பலாலி வானூர்தி தளத்தை இந்திய அரசின் செலவில் புதுப்பித்துக் கொடுத்தும், சிறிலங்கா வானூர்தி படைக்கு ரேடார்களைத் தந்ததோடு, இந்திய நிபுணர்களை சிறிலங்காவுக்கு அனுப்பியும் ஒட்டுமொத்தத்தில், சிங்கள அரசு நடத்தும் இராணுவத் தாக்குதலை, தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தத்தை முழுக்க முழுக்கப் பின்னாலே இருந்து இயக்கி வந்தது இந்திய அரசுதான் என்ற மறுக்க இயலாத உண்மை வெளிச்சத்துக்கு வந்துவிட்டது.
இலங்கைத் தீவில், மூன்று லட்சம் தமிழ் மக்கள் இராணுவத் தாக்குதலுக்கம் குண்டு வீச்சுக்கும் நடுவில், மரண பீதியில் துடிக்கின்றனர். தமிழக முதலமைச்சர் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், 'இலங்கையில் இரண்டு வார காலத்துக்கு உள்ளாக போர் நிறுத்தம் ஏற்படாவிடில், தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகுவார்கள்' என்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைச் செயல்படுத்த ஏன் முனையவில்லை?
போர்நிறுத்தம் செய்ய சிறிலங்காவை நிர்ப்பந்திக்குமாறு மத்திய அரசை அந்த இரண்டு வார காலத்தில் தமிழக முதலமைச்சர் ஏன் வற்புறுத்தவில்லை?
'போர்நிறுத்தம் செய்யுமாறு, இந்தியா அரசு எங்களைக் கேட்கவே இல்லை' என்று மகிந்த ராஜபக்சவும், பசில் ராஜபக்சவும் திமிரோடு சொன்னார்களே?
தாங்கள் நடத்தும் போருக்கு இந்திய அரசு முழுக்க முழுக்க ஆதரவாக இருப்பதால்தான், மகிந்த ராஜபக்ச டெல்லியில் மூர்க்கத்தனமாக தடித்த வார்த்தைகளை அகந்தையோடு சொன்னார்.
'கடந்த நான்கு ஆண்டுகளில் ஈழத்தில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதற்கும், அவர்கள் சிந்திய ஒவ்வொரு சொட்டு இரத்தத்துக்கும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பொறுப்பு ஏற்க வேண்டும்' என்று, கடந்த இரண்டு ஆண்டுக்காலமாக நான் குற்றம் சாட்டிவருகிறேன்.
'தமிழினத்துக்கு இந்திய அரசு செய்து உள்ள துரோகத்தை எதிர்த்து, தமிழக மக்களின் உள்ளம் கொந்தளிக்கும் கடல் ஆகும். குமுறும் எரிமலையாக மாறும்' என்ற அச்சத்தாலேயே, ஒருபக்கத்தில் போர்நிறுத்தம் செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை இந்திய அரசு எடுக்காமல், அதற்கு உரிய அரசியல் அழுத்தத்தைத் தமிழக முதலமைச்சரும் ஏற்படுத்தாமலேயே பிரச்சினையைத் திசை திருப்புகின்ற வகையில், மிகத் தந்திரமாக சில நடவடிக்கைகளைக் கையாள்கிறார்கள்.
ஈழத்தமிழர்களின் ஒரே பாதுகாப்புக் கவசம் விடுதலைப் புலிகள்தான். அவர்களை அழித்துவிட்டால் பின்னர் தமிழீழ மக்களை நிரந்தரமாக அடிமை இருளில் தள்ளிவிடலாம் என்பதுதான், சிங்கள அரசின் நயவஞ்சக திட்டம் ஆகும். இந்தத் திட்டத்துக்கு இந்திய அரசும் உடந்தை ஆகும்.
ஒரு காலத்தில் வல்லரசுகளையே எச்சரிக்கின்ற தகுதியும், மரியாதையும் பெற்று இருந்த பண்டித நேருவின் காலம் எங்கே? இந்திரா காந்தி அம்மையாரின் காலம் எங்கே? அடல் பிகாரி வாஜ்பாயின் காலம் எங்கே?
எட்டு கோடித் தமிழர்கள் மூச்சுவிட்டாலேயே பதர் போலக் காற்றில் பறக்கும் சிங்கள இனவெறி அரசின் தலைவர், டெல்லிக்கு வந்து திமிர்வாதம் பேசிவிட்டுப்போனது, சுதந்திர இந்திய வரலாற்றிலேயே நடக்காத களங்கம் மிக்க அவமானம் ஆகும்.
தமிழ்க் குலத்துக்கு மட்டும் அல்ல இந்திய மக்களுக்கும், இந்திய அரசு மன்னிக்க முடியாத துரோகத்தைச் செய்து உள்ளது.
சீன யுத்தத்தின் போதும், பாகிஸ்தான் போரின் போதும், இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை மேற்கொண்ட சிங்கள அரசு இனி எதிர்காலத்திலும் இந்தியாவின் பூகோள அரசியல் நலன்களுக்கு எதிராகவே செயற்படும், இந்தியாவின் தென்முனையில், ஈழத் தமிழர்களின் வலுதான், இந்தியாவுக்கே பாதுகாப்பு அரண் ஆகும்.
அருணாசலப் பிரதேசம் எங்களுக்கே சொந்தம் என்று அநியாயமாக உரிமை கொண்டாடும் சீனா ஒரு பக்கம், எந்த நேரத்திலும் இந்தியாவுக்குத் தீங்கு விளைவிக்கத் துடிக்கும் பாகிஸ்தான் ஒருபக்கம் இந்நிலையில் இந்துமா கடலிலும், தென்முனையில் இந்தியாவின் எதிர்கால நலன்களுக்குக் கேடு செய்யும் சிங்கள அரசுக்கு ஆயுதத்தைத் தீட்டிக்கொடுக்கும் முட்டாள்தனமும், அநியாயமும் நிறைந்த நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு உள்ளது.
இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்படுத்த நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளாததோடு, அந்த இனக்கொலை யுத்தத்தைப் பின்னிருந்து இயக்கும் இந்திய அரசை, அதன் துரோகத்தை தமிழக மக்களும், இந்திய மக்களும் கடுமையாக எதிர்த்துக் கண்டனம் தெரிவிக்க வேண்டும்.
அந்தக் கோபாவேச எழுச்சியைக் கண்டதற்குப்பிறகாவது, இந்திய அரசு தன் துரோகச் செயலை நிறுத்திக்கொண்டு சிறிலங்கா அரசு போர் நிறுத்தம் செய்யும் நிர்பந்தத்தை ஏற்படுத்த முன்வரட்டும் என்று வைகோ தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications