திருச்சி மாநகராட்சிக்குள் பன்றிகளை விட்ட கம்யூனிஸ்டுகள்
திருச்சி: திருச்சி மாநகரில் நிலவும் பன்றித் தொல்லையை தீர்க்க வலியுறுத்தி, மாநகராட்சி அலுவலகத்திற்குள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சில பன்றிகளைப் பிடித்து வந்து விட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்து அமைச்சர் கே.என். நேரு விரைந்து வந்து கம்யூனிஸ்ட் கட்சியினரை சமாதானப்படுத்தினார்.
திருச்சி மாநகரில் பன்றிகளின் பெருக்கம் அதிகமாகி விட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறி வருகிறது. இதன் காரணமாக மூளைக்காய்ச்சல் உள்ளிட்ட பல நோய்கள் பரவும் என்பதால், பன்றிகளைப் பிடிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அது வலியுறுத்தி வருகிறது.
இதுகுறித்து மாநகராட்சிக் கூட்டங்களிலும் கூட பலமுறை வலியுறுத்தப்பட்டது. இருப்பினும் பன்றிகளைப் பிடிக்க மாநகராட்சி சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று சில கம்யூனிஸ்ட் தொண்டர்கள் பன்றிகளைப் பிடித்துக் கொண்டு வந்தனர். மாநகராட்சி அலுவலகம் அருகே வந்ததும் அவற்றை திறந்து உள்ளே விரட்டினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
அதிர்ச்சி அடைந்த மாநகராட்சி ஊழியர்கள் பன்றிகளைத் தடுத்துப் பிடித்தனர்.
இந்தத் தகவல் போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேருவுக்கு போனது. உடனடியாக அவர் விரைந்து வந்தார். கம்யூனிஸ்ட் கட்சியினரை அமைதிப்படுத்தினார்.
உடனடியாக பன்றிப் பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து பன்றி விரட்டுப் போராட்டத்தைக் கைவிட்டு விட்டு கலைந்து சென்றனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மேயர் சாருபாலா தொண்டைமான் கூறுகையில், பன்றிகள் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதில் தவறும் மாநகராட்சி அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications