தமிழக மீனவர்கள் கைது: இலங்கை தூதரகம் விளக்கம்
சென்னை: மீன் பிடிக்க தடை செய்யப்பட்ட பகுதிகளில் புகுந்து, இலங்கை கடற்படை தளங்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் தமிழக மீன்பிடி படகுகள் வந்து கொண்டிருந்தமையால் சில படகுகளை கைது செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதாக இலங்கை துணைத் தூதரகம் விளக்கியுள்ளது.
இது குறித்து சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
19-ந் தேதி பிரசுரமான சில நாளிதழ்களில் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டனம் அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்று காங்கேசன்துறையில் வைத்திருப்பதாக வெளியான செய்தி எங்களது கவனத்திற்கு வந்தது.
இது பற்றிய உண்மை நிலையை தமிழக மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் விளக்கம் தர கடமைப்பட்டுள்ளோம்.
17-ந் தேதி மாலை 5 மணி அளவில் பெரும் எண்ணிக்கையான தமிழக மீன்பிடி படகுகள் இலங்கை கடல் எல்லைக்குள் உட்புகுந்து பாதுகாப்பு வளையத்திற்குள் வருகின்ற நயினாதீவு, பாலைத்தீவு, நெடுந்தீவு போன்ற பிரதேசங்களுக்கு மிக அருகில் மீன் பிடித்துள்ளனர்.
27.3.2006-ம் தேதி இலங்கை அரசாங்க வர்த்தகமானியில் பிரசுரிக்கப்பட்ட அறிவிக்கையின் படி, இது மீன் பிடிக்க தடை செய்யப்பட்ட பகுதிகளாகும்.
இவ்வாறு மீன் பிடித்துக் கொண்டிருந்த படகுகளில் ஒரு சில படகுகள் நயினாதீவு, அனலைதீவு, எழுவைதீவு ஆகிய தீவுகளுக்கு இடையில் உள்ள கடற்பரப்பு ஊடாக இலங்கை நிலப்பரப்பு நோக்கி வந்து கொண்டிருப்பதை கடற்படையினர் அவதானித்துள்ளனர்.
தீவு பகுதிகளில் நிலைகொண்டு உள்ள கடற்படை தளங்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் மேற்படி மீன்பிடி படகுகள் நிலப்பரப்பிற்கு மிக அருகில் வந்து கொண்டிருந்தமையால் சில படகுகளை கைது செய்ய வேண்டிய கட்டாயம் இலங்கை கடற்படையினருக்கு ஏற்பட்டது.
அதன்படி மாலை 5.45 மணியளவில் 5 மீன்பிடி படகுகளையும், அதிலிருந்து 17 மீனவர்களையும், இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் அவர்களுடைய படகுகளுடன் ஊர்காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications